"ரத்த ஆறுதான் ஓடும்" "ஹோட்டல் சர்வர்" மாதிரி டிரெஸ் போடுவதா? அருண் ஜேட்லி மீது சு.சுவாமி பாய்ச்சல்
டெல்லி: தாம் ஒழுங்கீனாமாக நடக்க நினைத்தால் ரத்த ஆறுதான் ஓடும் என்று நிதி அமைச்சர் அருண்ஜேட்லியை மறைமுக பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி சாடியுள்ளார்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனை விமர்சித்த சுப்பிரமணியன் சுவாமி பிரதமரின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், பொருளாதார விவகார செயலாளர் சக்திகாந்த தாஸ் ஆகியோரையும் விட்டுவைக்கவில்லை.
ஜேட்லி அட்வைஸ்
சுப்பிரமணியன் சுவாமியின் இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்திருந்த நிதி அமைச்சர் அருண்ஜேட்லி, தம்முடைய கருத்துகளில் சுய கட்டுப்பாட்டையும், ஒழுக்கத்தையும் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார். இதற்கு தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.
|
ரத்த ஆறுதான்...
அதில் அருண் ஜேட்லியின் பெயரை குறிப்பிடாமல், சிலர் சுய கட்டுப்பாடு, ஒழுக்கம் பற்றி நான் கேட்காமலே எனக்கு அறிவுரை சொல்கிறார்கள். நான் ஒழுங்கீனமாக நடக்க நினைத்தால் ரத்த ஆறுதான் ஓடும் என்பது அவர்களுக்கு தெரியவில்லை எனக் கூறியிருக்கிறார்.
|
வெயிட்டர் மாதிரி...
அத்துடன் அருண் ஜேட்லி சீனா பயணத்தின்போது அணிந்திருந்த கோட்-சூட்டையும் சுப்பிரமணியன் சுவாமி மறைமுகமாக கிண்டல் செய்துள்ளார். இது தொடர்பான ட்விட்டர் பதில், வெளிநாட்டு பயணத்தின்போது, நமது பாரம்பரிய உடைகளையும், நவீன இந்திய உடைகளையும் மட்டுமே அணியுமாறு மத்திய அமைச்சர்களுக்கு பாஜக அறிவுறுத்த வேண்டும். கோட் மற்றும் டை அணிந்து ஹோட்டல் வெயிட்டர்கள் போலவே இருக்கிறார்கள் என்றும் போட்டுத் தாக்கியிருக்கிறார் சு.சுவாமி.
பாஜக- ஆர்.எஸ்.எஸ். அதிருப்தி
பாஜக எம்.பி.யாக இருந்து கொண்டே தொடர்ச்சியாக மத்திய அரசு அதிகாரிகளையும் அமைச்சர்களையும் சகட்டுமேனிக்கு விமர்சித்து வருகிறார் சு.சுவாமி. இது பாஜக மற்றும் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை கடும் அதிருப்தியடை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.