ஒடிஷாவில் கர்ஜிக்கும் சுகோய் போர் விமான என்ஜின்கள்
புவனேஸ்வர்: ஒடிஷா மாநிலம் கோரபுட்டில் உள்ள என்ஜின் பிரிவை ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (ஹெச்.ஏ.எல்.) நிறுவனம் மேம்படுத்தியுள்ளது.
ஒடிஷா மாநிலம் கோரபுட் மாவட்டம் சுனபேடாவில் உள்ள ஹெச்.ஏ.எல்.-இன் என்ஜின் பிரிவுக்கு எமது ஒன்இந்தியா நிருபர் சென்றார். இந்த பிரிவை சுற்றிப் பார்க்க அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த பிரிவு 1964ம் ஆண்டு துவங்கப்பட்டது. அண்மையில் தான் இந்த பிரிவு தனது 50 ஆண்டுகளை நிறைவு செய்தது. இந்திய விமானப்படை தளபதி அரூப் ராஹா இந்த பிரிவு இந்தியாவின் ஏரோ என்ஜின் தலைநகராக வேண்டும் என்று விரும்புகிறார். ராஹாவின் கருத்துகளை ஒடிஷா பிரிவின் தலைமை செயலாளர் ஜி.சி. பாட்டி தெரிவித்தார்.
என்ஜின் பிரிவில் 2 ஆயிரத்து 945 தொழிலாளர்கள் மற்றும் 830 எக்சகியூட்டிவ்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 775 பேர் பணியாற்றி வருகிறார்கள். அடுத்த 5 ஆண்டுகளில் இந்த பிரிவில் அதிகம் முதலீடு செய்யப்பட உள்ளது.
இது குறித்து கோரபுட் பிரிவின் பொது மேலாளர் மலோய் டே ஒன்இந்தியாவிடம் கூறுகையில்,
கடந்த 50 ஆண்டுகளில் நாங்கள் இங்கு 1, 574 என்ஜின்களை தயாரித்துள்ளோம். மேலும் 7 ஆயிரத்து 417 பழைய என்ஜின்களை புதிதாக்கியுள்ளோம். 2013-2014ம் நிதியாண்டில் ரூ.1, 579 கோடி வருமானம் ஈட்டியுள்ளோம் என்றார்.
அடுத்த 5 ஆண்டுகளில் இந்த பிரிவில் ரூ.4 ஆயிரத்து 500 கோடி முதலீடு செய்யவும், 2020ம் ஆண்டுக்குள் வருமானத்தை ரூ.3 ஆயிரத்து 341 கோடியாக ஆக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கோரபுட் பிரிவு துவங்கியதில் இருந்து இதுவரை ஆர்-25, ஆர்-29பி, ஆர்டி- 33 மற்றும் ஏஎல்-31எப்பி என்ஜின்கள் புதிதாக்கப்பட்டு எம்ஐஜி-21 சீரிஸ், எம்ஐஜி-27எம், எம்ஐஜி-29 மற்றும் சு-30 எம்கேஐ விமானங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
இன்டர்மீடியேட் ஜெட் ட்ரெய்னருக்கான ஏஎல்-55ஐ என்ஜின்களை பரிசோதிக்கும் தளமும் கோரபுட் பிரிவில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சுகோய் விமானங்களுக்கான சிங்கிள் கிறிஸ்டல் பிளேடுகள் தயாரிக்கும் வசதியும் இங்கு உள்ளது.
ஆர்டி-33 சீரிஸ்-3 என்ஜின்களுக்கான 6 பாகங்கள் குறித்து ரஷ்யாவுடன் தொழில்நுட்ப பகிர்வு எதுவும் நடக்கவில்லை. தொழில்நுட்பத்தை பகிர ரஷ்யா கூடதல் நிதி கேட்டதால் அது தாமதமானது. தொழில்நுட்ப பகிர்வு வரும் 2016ம் ஆண்டில் தான் நடக்கும் என்று ப்ராஜெக்ட் தலைவர் அரூப் சாட்டர்ஜி தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
கடந்த 2007ம் ஆண்டில் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து சுமார் 100 என்ஜின்களை வாங்கியுள்ளது. அந்த என்ஜின்களை புதுப்பிக்கையில் 6ல் 3 பாகங்களுக்கு நாங்களே வெற்றிகரமாக தொழில்நுட்பத்தை உருவாக்கிவிட்டோம். மீதமுள்ள 3 பாகங்களுக்கான தொழில்நுட்பம் வரும் 2015ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் ஹெச்.ஏ.எல்.-இல் உருவாக்கப்படும் என்றார்.
ஆர்-33 என்ஜின்களுக்கான கேஎஸ்ஏ-2 பாகத்தின் கியர்பாக்ஸுக்கான புதுப்பிக்கும் தொழில்நுட்பத்தை ஹெச்.ஏ.எல். உருவாக்கியது. அந்த தொழில்நுட்பத்திற்கு ஒப்புதலும் கிடைத்துள்ளது.
சுகோய்
சுகோய் (சு-30 எம்கேஐ) என்ஜினில் ரோபாட்டிக் வெல்டிங் சிஸ்டம் உள்ளிட்ட அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றது. மூலப் பொருட்களில் இருந்து இதுவரை 23 என்ஜின்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.
சுகோய் என்ஜின் பிரிவு பொது மேலாளர் ராஜாராம் மொஹந்தி ஒன் இந்தியாவிடம் கூறுகையில்,
இந்த பிரிவில் இதுவரை சுகோய் விமானங்களுக்காக 280 (ஏஎல்-31எப்.பி.) என்ஜின்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 158 என்ஜின்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மூலப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட முதல் என்ஜின் 2011-2012ம் ஆண்டு வெளியிடப்பட்டது. சுகோய் என்ஜின்களை பரிசோதிக்கத் தேவையான உபகரணங்கள் நம்மிடம் உள்ளது.
சுகோய் என்ஜினின் ஆயுள் 2 ஆயிரம் மணிநேரம் ஆகும். அதை புதுப்பிப்பதன் மூலம் அதன் ஆயுள் கூடுதலாக 1000 மணிநேரம் அதிகரிக்கப்படுகிறது. இந்தியா-ரஷ்யா கூட்டுமுயற்சியில் உருவாகும் ஐந்தாம் தலைமுறை போர் விமான திட்டம் முழுவடிவம் பெற்றால் ஹெச்.ஏ.எல். மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.
என்ஜின் சோதனை தளம்
என்ஜின்களை விமானங்களில் எடுத்து சென்று உயரமான இடத்தில் ஆக்சிஜன் குறைவாக உள்ள பகுதியில் வைத்து சோதனை செய்யும் பிரிவை ரூ.1,500 கோடி முதலீட்டில் உருவாக்க உள்ளனர். இந்த பிரிவு மட்டும் துவங்கப்பட்டால் புதிய என்ஜின்களை சோதனை செய்ய இத்தகைய வசதி கொண்ட நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும் என்று ஐஜேடி மற்றும் சர்வீசஸ் பிரிவின் ப்ராஜெக்ட் தலைவர் ஆஷிஷ் குமார் ராய் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கேஸ் டர்பைன் ஆய்வு மைய அதிகாரிகள் ஹெச்.ஏ.எல்.லுக்கு வந்து முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். சுனபேடாவில் பல நீர் நிலைகள் இருப்பது இந்த திட்டத்திற்கு நல்ல விஷயம் ஆகும். ஏனென்றால் இத்திட்டத்திற்கு ஏராளமான நீர் தேவைப்படும். மேலும் மின்சாரமும் தேவைப்படும். மின்சாரத்தை வழங்க மாநில அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
தியாகி
இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தான் தான் காரணம் என பெருமை கொள்ளாதவர் ஹெச்.ஏ.எல். தலைவர் ஆர்.கே. தியாகி. அவர் கடந்த 2012ம் ஆண்டு ஹெச்.ஏ.எல். தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால் கோரபுட் பிரிவு ஊழியர்களோ தியாகியை பாராட்டுகிறார்கள்.
தியாகி கூறுகையில்,
இது என் வேலை. கோரபுட் பிரிவின் வளர்ச்சியை தான் நான் பார்க்கிறேன். தூரம் என்பதால் கோரபுட் வருவது பிரச்சனையாக இருக்கிறது. ஆனால் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் நாம் தூரத்தை குறைக்க முடியும். கோரபுட் பிரிவுக்கு நான் அடிக்கடி வருவது ஊழியர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. நான் ஹெச்.ஏ.எல். கேப்டனாக எனது பணியை செய்கிறேன். கோரபுட் பிரிவின் அடுத்த 50 ஆண்டுகளுக்கான பாதை தெளிவாக உள்ளது என்றார்.