சன் டிவி சேனல்கள் அனுமதி மறுப்பு: உள்துறையிடம் மீண்டும் விளக்கம் கேட்கும் ஒளிபரப்பு துறை!
டெல்லி: சன் குழுமத்தின் டிவி சேனல்களுக்கு பாதுகாப்பு அனுமதியை மறுப்பதற்கான விவரங்களைத் தெரிவிக்குமாறு உள்துறை அமைச்சகத்தை தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் மீண்டும் கேட்டிருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
2001, 2002-இல் தொலைக்காட்சி சேவை தொடங்க முறையான அனுமதி பெற்ற சன் டிவி, சன் நியூஸ், சூர்யா டிவி, சுட்டி டிவி, சன் மியூசிக், ஆதித்யா டிவி, கிரண் டிவி, உதயா காமெடி, குஷி டிவி, சிண்டு டிவி, கே டிவி, உதயா டிவி, உதயா மியூசிக், ஜெமினி டிவி, ஜெமினி காமெடி ஆகிய 15 தொலைக்காட்சி அலைவரிசைகளின் உரிமம் 2011, 2012 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்து காலாவதியாகின.
இதன் பிறகு இத்தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கான உரிமம் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு எதிரான ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு, அது தொடர்புடைய அமலாக்கத் துறையின் பணப் பரிவர்த்தனை வழக்கு ஆகியவை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
தயக்கம் காட்டும் உள்துறை
மேலும் ஒரு வழக்கு சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதைத் தொடர்ந்து உரிமத்தை புதுப்பிக்கக் கோரி சன் டிவி நிறுவனம் இந்த ஆண்டு அளித்த 15 அலைவரிசைகளின் விண்ணப்பத்தைப் பரிசீலிக்க உள்துறை தயக்கம் காட்டி வருகிறது. மீதமுள்ள 18 அலைவரிசைகளின் உரிமம் காலாவதியாக மேலும் சில ஆண்டுகள் உள்ளன. இதனால் சன் டிவி சேனல்களுக்கான பாதுகாப்பு சான்றிதழை உள்துறை அமைச்சகம் மறுத்தது.
ரோத்தகியிடம் ஆலோசனை
இது தொடர்பாக செய்தி, ஒளிபரப்புத்துறை அமைச்சகமும் சட்ட அமைச்சகத்திடம் ஆலோசனை நடத்தியது. பின்னர் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகியிடம் ஆலோசனை கேட்கபட்டது. அவர் உள்துறை அமைச்சகத்தின் முடிவு சரியல்ல என கூறியிருந்தார்.
பிரதமர் செயலர் ஆலோசனை
இதனிடையே உள்துறை அமைச்சகத்துக்கு சன் டிவி குழுமத்தின் தலைவர் கலாநிடி மாறனும் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலர் நிருபேந்திர மிஸ்ரா முன்னிலையில் மத்திய உள்துறை, சட்டத் துறை, செய்தி ஒளிபரப்புத் துறை ஆகியவற்றின் செயலர்கள், அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
மீண்டும் விளக்கம்
அதில் சன் டிவி சேனல்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று உள்துறை அமைச்சகத்தின் தரப்பில் உறுதியுடன் தெரிவிக்கப்பட்டது. இப்படி பாதுகாப்பு அனுமதியை உள்துறை அமைச்சகம் தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், மீண்டும் அதற்கான விளக்கத்தை தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் கேட்டிருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.