சுனந்தாவின் இமெயில்கள், செல்போன் மெசேஜ்கள் அழிப்பு: யார் செய்த வேலை?
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் இமெயில்களை யாரோ அழித்துள்ளது தெரிய வந்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி டெல்லியில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் பிணமாகக் கிடந்தார். அவர் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டதாக இந்த ஆண்டு டெல்லி போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து சுனந்தாவின் கொலை குறித்து சசி தரூர் உள்பட பலரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.
செல்போன்
சுனந்தாவின் செல்போன்கள் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. ஆய்வில் செல்போன்களில் இருந்து சில தகவல்கள் அழிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. சுனந்தா இறப்பதற்கு முன்பா அல்லது அவர் இறந்த பிறகு அந்த தகவல்கள் அழிக்கப்பட்டதா என்று தெரியவில்லை.
போலீஸ்
சுனந்தா இறந்த உடன் அந்த இடத்தை போலீசார் அடையும் முன்பு சிலர் அவரின் ஹோட்டல் அறைக்குள் நுழைந்ததாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிளாக்பெர்ரி
சுனந்தாவின் பிளாக்பெர்ரியில் இருந்த மெசேஜ்களை அவரே அழித்தாரா அல்லது யாராவது அழித்தார்களா என்பதை கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இமெயில்கள்
சுனந்தாவின் இமெயில்களில் சில அழிக்கப்பட்டுள்ளதை டெல்லி போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அந்த இமெயில்கள் எப்பொழுது அழிக்கப்பட்டன என்பதை கண்டுபிடிக்க கால அவகாசம் தேவை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
லேப்டாப்
சுனந்தாவின் லேப்டாப் டெல்லி போலீசாரிடம் உள்ளது. ஆனால் அதிலும் சில ஃபைல்களை காணவில்லை. அந்த ஃபைல்கள் அவர் இறந்த பிறகு அழிக்கப்பட்டனவா என்று விசாரணை நடந்து வருகிறது.
ஃபேஸ்புக்
சுனந்தாவின் செல்போன்களில் பல தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் போலீசார் அவரின் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து தகவலை பெற உள்ளனர்.
யார் அது?
சுனந்தாவின் போன்களில் இருந்து மெசேஜ்கள், லேப்டாப்பில் இருந்து ஃபைல்கள் மற்றும் இமெயில்களை அழித்தது யார், எதற்காக செய்தார்கள் என்பது தான் தற்போது பெரிய குழப்பமாக உள்ளது.