தரூர் கன்னத்தில் சுனந்தா அறைந்தாரா?: மனீஷ் திவாரியிடம் போலீஸ் விசாரணை
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா கொலை வழக்கு தொடர்பாக டெல்லி போலீசாரின் சிறப்பு குழு முன்னாள் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் மனீஷ் திவாரியிடம் விசாரணை நடத்தியது.
முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் கொலை வழக்கு குறித்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சிறப்பு குழு சசி தரூர், சுனந்தாவின் மகன் ஷிவ் மேனன் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தியுள்ளது. அதிலும் தரூரிடம் மூன்று முறை விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறப்பு விசாரணை குழு முன்னாள் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் மனீஷ் திவாரியிடம் வாக்குமூலம் பெற்றது.
சண்டை
கடந்த ஆண்டு சுனந்தாவும், தரூரும் மும்பைில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் பலரின் முன்பு சண்டை போட்டனர். அந்த விமானத்தில் திவாரியும் இருந்தார். அவர் சண்டையை பார்த்தாரே தவிர அதை தடுத்து நிறுத்த முயற்சிக்கவில்லை. இந்நிலையில் தான் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
சுனந்தாவும், தரூரும் விமானத்தில் பல மணிநேரம் சண்டை போட்டதாக அதை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். விமானம் டெல்லி வந்தும் சுனந்தாவும், தரூரும் சண்டை போட்டுள்ளனர். இந்த சண்டை கைகலப்பில் முடிந்ததா என்பதை அறிய விசாரணை நடத்தப்பட்டது. ஏனென்றால் சுனந்தா தரூரின் கன்னத்தில் அறைந்ததாக சிலர் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.