சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு: சசி தரூரிடம் டெல்லி போலீஸ் இன்று மீண்டும் விசாரணை!
டெல்லி: சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரிடம் டெல்லி காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் இன்று மீண்டும் விசாரணை நடத்தினர்.
முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் டெல்லி ஹோட்டல் அறையில் பிணமாக கிடந்தார். அவரது மரணம் தற்கொலை என்று முதலில் கூறப்பட்டாலும் பின்னர் அது கொலை வழக்காக மாற்றப்பட்டது.
இந்த கொலை வழக்கை விசாரிக்க டெல்லி காவல்துறை சிறப்பு புலனாய்வு குழு அமைத்தது. இக்குழு சசி தரூரின் உதவியாளர் ஆர்.கே.சர்மா, டெல்லி பத்திரிகையாளர் நளினிசிங் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தியது.
இந்த விசாரணைகளின் போது ஐ.பி.எல். போட்டி முறைகேடுகளை அறிந்த சுனந்த அதை அம்பலப்படுத்த திட்டமிட்டிருந்ததாக தெரியவந்தது. இதனால் இந்த கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டது. இதன் பின் விசாரணைக்கு ஆஜராகுமாறு சசி தரூருக்கு சிறப்பு புலனாய்வு குழு சம்மன் அனுப்பியது.
சசி தரூரும் சம்மனை பெற்றுக்கொண்டு புலனாய்வு குழு முன் ஆஜராகி 50-க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். இதே போல் சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் அமர்சிங்கிடமும் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியது.
இதனைத் தொடர்ந்து துபாயில் இருந்த சுனந்தாவின் மகன் ஷிவ் மேனனும் விசாரணைக்கு வரவழைக்கப்பட்டார். இந்நிலையில் சசி தரூரை இன்று மீண்டும் விசாரணைக்கு வருமாறு டெல்லி சிறப்பு புலனாய்வுக் குழு சம்மன் அனுப்பியிருந்தது.
Shashi Tharoor questioned by SIT probing his wife Sunanda Pushkar's death.
— Press Trust of India (@PTI_News) February 12, 2015
இதனடிப்படையில் டெல்லி சரோஜினிநகர் காவல்நிலையத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு முன்பாக சசி தரூர் இன்று காலை 10.30 மணிக்கு ஆஜரானார். அவருடன் வழக்கறிஞர்களும் வந்திருந்தனர்.
அங்கிருந்து சசிதரூர் 11.30 மணியளவில் வசந்த் விகாரில் உள்ள சிறப்புப் புலனாய்வு அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சசிதரூரிடம் காவல்துறை அதிகாரிகள் பி.எஸ். குஷாவ் மற்றும் ராஜேந்திர சிங் ஆகியோர் அடங்கிய குழு விசாரணை நடத்தியது.
சுனந்தா மகன் ஷிவ் மேனன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சசி தரூரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சசி தரூரின் உதவியாளர்கள் நரேண் சிங், பஜ்ரங்கி ஆகியோரிடமும் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழு திட்டமிட்டுள்ளது.