சுனந்தாவுக்கு விஷம் கொடுத்தவர் உருவம் சிசிடிவி கேமராவில் பதிவு?
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கருக்கு விஷம் கொடுத்தவர் அவருக்கு தெரிந்தவராக இருக்க வேண்டும் என்று விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கருக்கு அவருக்கு தெரிந்த யாரோ தான் விஷம் கொடுத்திருக்க வேண்டும் என்று விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஆனால் எதற்காக சுனந்தா கொல்லப்பட்டார் என்பதை தான் கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சுனந்தாவின் உடற்கூறுகள் வெளிநாட்டு தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் விசாரணையில் கிடைக்கும் தகவலை தான் நம்ப வேண்டியுள்ளது என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
சுனந்தா
சுனந்தா தனது கடைசி நாட்களில் சந்தோஷமாக இல்லை என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆனால் தரூரோ தனக்கும் சுனந்தாவுக்கும் இடையே எந்தவித பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதுவரை விசாரிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சுனந்தா சந்தோஷமாக இல்லை என்றே தெரிவித்துள்ளனர்.
ஊசி
சுனந்தாவின் உடலில் 15 காயங்கள் உள்ளன. அவருக்கு தெரிந்த யாரோ தான் அவருக்கு விஷத்தை கொடுத்திருக்க வேண்டும். ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானவற்றை ஆய்வு செய்து சம்பவம் நடந்த அன்று யார், யாரெல்லாம் சுனந்தாவின் அறைக்கு சென்றார்கள் என்பதை கிட்டத்தட்ட தெரிந்துள்ளோம். அந்த நபர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
தரூர்
சசி தரூரிடம் விசாரணை நடத்துவதில் வேண்டும் என்றே தாமதம் செய்யவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அவரை விசாரிப்பது இந்த வழக்கிற்கு மிகவும் முக்கியம். ஆனால் அவரை விசாரிக்கும் முன்பு நாங்கள் தேவையான தகவல்களை எல்லாம் சேகரிக்க விரும்புகிறோம் என்று போலீசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
மருத்துவர்கள் அறிக்கையை மாற்றி எழுத தரூர் ஏதாவது முயற்சி செய்தாரா என்பதையும் போலீசார் கண்டுபிடிக்க உள்ளனர். ஐபிஎல் ஊழல் கோணத்திலும் தரூரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.