சுனந்தாவின் தோழி பத்திரிக்கையாளர் நளினி சிங்கை இன்று விசாரிக்கும் போலீஸ்
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா கொலை வழக்கில் மூத்த பத்திரிக்கையாளர் நளினி சிங்கிடம் டெல்லி போலீசார் இன்று விசாரணை நடத்த உள்ளனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் சில பத்திரிக்கையாளர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்று டெல்லி போலீசார் அறிவித்தனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சுனந்தாவுக்கு நெருக்கமான மூத்த பத்திரிக்கையாளரான நளினி சிங்கிடம் போலீசார் இன்று விசாரணை நடத்த உள்ளனர்.
ஐபிஎல் தொடர்பு:
சுனந்தா ஐபிஎல் பற்றி தன்னிடம் பேசியதாக அண்மையில் நளினி சிங் தெரிவித்திருந்தார். ஜனவரி 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் சுனந்தா நளினியிடம் ஐபிஎல் விவகாரம் பற்றி பேசியுள்ளார். சுனந்தா தன்னிடம் என்ன தெரிவித்தார் என்பதை நியாபகப்படுத்த முடியவில்லை என்று நளினி தெரிவித்துள்ளார். இந்த ஐபிஎல்லில் நடக்கும் விஷயங்களை பார்த்தாயா என்று சுனந்தா தன்னிடம் கூறியதாக நளினி தெரிவித்துள்ளார்.
சுனந்தா இறந்த பிறகு நளினி சிங் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார். சுனந்தா விவகாரம் குறித்து போலீசார் மேலும் விசாரிக்க வேண்டும் என்று நளினி சிங் தெரிவித்திருந்தார்.
சசி தரூர் பாகிஸ்தான் பத்திரிக்கையாளரான மெஹர் தராருடன் துபாயில் 3 நாட்கள் இருந்ததாக சுனந்தா நளினியிடம் தெரிவித்துள்ளார்.