"தலாக்" சொல்லும் முன் 3 மாத அவகாசம் வேண்டும்.. சட்டத்திருத்தம் செய்ய மத குருமார்கள் வலியுறுத்தல்
கான்பூர் : முஸ்லிம்கள் விவகாரத்து செய்வதற்காக கடைப்பிடிக்கப்படும் தலாக் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று மத குருமார்கள் அங்கம் வகிக்கும் சன்னி உலேமா கவுன்சில் என்ற அமைப்பு வலியுறுத்தியது.
இது தொடர்பாக அனைத்து இந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரியத்துக்கும், முஸ்லிம் மத அறிஞர்களுக்கும் அந்த அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.
அதில், தலாக் எனப்படும் விவாகரத்தை இறுதி செய்வதற்கு முன்பு 3 மாத கால இடைவெளி அளிப்பதுடன், அதை கட்டாயமாக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான், சூடான், ஜோர்டான் உள்ளிட்ட 7 முஸ்லிம் நாடுகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ள இந்த வழக்கத்தை இந்தியாவிலும் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சன்னி உலேமா கவுன்சிலின் பொதுச் செயலாளர் ஹாஜி முகமது சலீஸ் கூறியதாவது...
ஒரு முஸ்லிம் கணவர் ஆத்திரத்தில் இருக்கும்போதோ அல்லது மயக்க நிலையில் இருக்கும்போதோ தலாக் சொல்லிவிட்டால், தற்போதுள்ள சூழ்நிலைகளின்படி அதை மாற்ற இயலாது.
இதுபோன்று தலாக் அளிக்கும் ஆண்களில் 90% பேர் பிற்காலத்தில் வருந்துவதுடன், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இணைய விரும்புகின்றனர். ஆனால், இந்த மாதிரியான சூழல்களில் ஏராளமான குழப்பங்கள் ஏற்பட்டு விடுகின்றன.
எனவே, மூன்று மாத கால கட்டாய அவகாசம் வழங்குதன் மூலம் இஸ்லாமிய தம்பதியர்கள் தங்களுக்குள் உள்ள வேறுபாடுகளைக் களைய வாய்ப்பளிக்க வேண்டும். இதைச் செய்தால் மறுபரிசீலனைகள் என்பது அதிகரிக்கும். பிரியும் குடும்பங்கள் குறைவாக இருக்கும்.
சன்னி உலேமா கவுன்சிலின் பொதுச் செயலாளர் ஹாஜி முகமது சலீஸ் வலியுறுத்தியுள்ளார்.