விதிமுறையே இல்லாமல் தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்கிறீர்களே.. மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி!
இந்திய தலைமை தேர்தல் ஆணையரை நியமிப்பதில் ஏன் விதிகளை வகுக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
டெல்லி : இந்திய தலைமை தேர்தல் ஆணையரை நியமிப்பதில் வெளிப்படைத் தன்மை ஏன் பின்பற்றப்படவில்லை என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரை நியமிப்பதில் வெளிப்படைத் தன்மை இல்லை, அந்தந்த அரசுகள் வரும் போது அவர்களுக்கு ஏற்ப தலைமை தேர்தல் ஆணையர் நியமிக்கப்படுவதாகக் கூறி மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, இது வரை இந்திய தலைமை தேர்தல் ஆணையரை நியமித்தது குறித்து எந்த கருத்தையும் கூற விரும்பவில்லை. ஆனால் இனியாவது வெளிப்படைத் தன்மையோடு தலைமை தேர்தல் ஆணையரை நியமனம் செய்யலாமே என்று கேள்வி எழுப்பினார்.
தலைமைத் தேர்தல் ஆணையரை நியமிப்பதற்கு ஏன் பிரத்யேக சட்டம் இல்லை என்றும் நீதிமன்றம் கேட்டுள்ளது. நாடாளுமன்ற நிபுணர்கள் அமர்வு இதற்கான சட்டத்தை இயற்றுகிறதா அல்லது நீதிமன்றமே தலையிட்டு சட்டம் இயற்ற வேண்டுமா என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆணையர் முக்கியமான பதவி வகிப்பதால் அவருக்கான நியமனத்தில் விதிகளை வரையறுப்பது அவசியம் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும் இது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் விசாரணையை 2 மாதத்திற்கு பின்னர் ஒத்திவைத்தனர்.
இந்திய தேர்தல் ஆணையரின் பதவிக்காலம் நாளையுடன் முடியும் நிலையில் குஜராத்தை சேர்ந்த அச்சல் குமார் ஜோதி புதிய இந்திய தேர்தல் ஆணையராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள அறிவுரை முக்கியத்துவம் பெற்றுள்ளது.