காவிரியில் கழிவு நீர் கலப்பு.. தமிழகம், கர்நாடகா வல்லுநர் குழு அமைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
காவிரியில் கழிவு நீர் கலக்கப்படுவதாக தமிழகம் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.
டெல்லி: காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தது.
கர்நாடக அரசு வினாடிக்கு 2000 கன அடி நீரை காவிரியிலிருந்து தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கடந்த வருடம் பிறப்பித்த உத்தரவை இதுவரை கர்நாடகா மதிக்கவில்லை.
இந்நிலையில், கர்நாடகாவிடமிருந்து பயிர் நஷ்ட ஈடாக ரூ.2480 கோடியை பெற்றுத்தருமாறு சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம் வழக்கு தொடர்ந்தது. விசாரணை நடத்திய அமிதவா ராய் மற்றும் கன்வில்கர் ஆகிய நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் அடுத்த உத்தரவு வரும்வரை 2000 கன அடி நீரை திறந்துவிட உத்தரவிட்டது.
இந்நிலையில் காவிரியில் கழிவு நீரை கர்நாடகா கலப்பதாக தமிழகம் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு மாநிலங்களுமே சூழல்வியல் நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், வல்லுனர் குழு அமைப்பது குறித்து 2 வாரங்களுக்குள் இரு மாநிலங்களும் பதில் வழங்க வேண்டும் என்று கூறி 2 வாரங்களுக்கு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தது.