புதிய அணு உலைகள் அமைக்க எதிர்த்து வழக்கு… மத்திய அரசு பதில் தர சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
கூடங்குளத்தில் புதியதாக 4 அணு உலைகள் அமைக்கக் கூடாது என்று தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லி: கூடங்குளத்தில் 4 புதிய அணு உலைகள் அமைப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணுஉலை பூங்கா வளாகத்தில் அமைய உள்ள 3 மற்றும் 4-வது அலகு மற்றும் 5 மற்றும் 6வது அலகுகள் அமைப்பதற்கு, கடந்த 2012ம் ஆண்டு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டது.
இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பூவுலகின் நண்பர்கள் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. அவர்கள் அளித்துள்ள மனுவில் அணு உலை விபத்து ஏற்பட்டால் அரசு பல லட்சம் கோடி இழப்பீடாக வழங்க வேண்டி வரும் என்றும் அதற்கான ஒப்புதலை நாடாளுமன்றத்தில் பெற வேண்டும் என்றும் அப்படி ஒப்புதலைப் பெறுவதற்கான வழிவகை கூடங்குளம் ஒப்பந்தத்தில் இல்லை என்றும் கூறப்பட்டிருந்தன. இந்த அணு உலை மக்களுக்கு எதிரானது என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டது.
இது தொடர்பாக வழக்கு இன்று விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டில் வந்தது. அப்போது மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், ஜூலை மாதத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.