காதலனால் கர்ப்பம்.. உச்சநீதிமன்றம் வரை போராடி 24 வார கரு கலைக்க அனுமதி பெற்ற இளம் பெண்
மும்பை: காதலன் செய்த பலாத்காரத்தால் கர்ப்பம் தரித்து குறையுடன் வளரும் 24 வாரக் கருவைக் கலைக்க பாதிக்கப்பட்ட மும்பை பெண்ணுக்கு உச்சநீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகியிருந்தார். இதன் காரணமாக அவர் கருவுற்றார்.
இந்த குழந்தையை கலைக்க வேண்டும் என்று அப்பெண் விரும்பினார். கருவில் வளரும் குழந்தை குறைவான வளர்ச்சி கொண்டதாக இருப்பதும், இதற்கு ஒரு காரணம்.
காதலனால் கர்ப்பம்
இந்நிலையில், மும்பை பெண், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். காதலனை நம்பி, கர்ப்பம் தரித்தேன். இதன் பின்னர் காதலன் என்னை கைவிட்டு விட்டார். கர்ப்பத்தில் வளரும் குழந்தைக்கு 24 வாரங்கள் ஆகிறது. அந்தக் குழந்தை குறையுடன் வளர்கிறது. ஆதலால் அந்தக் குழந்தையை கலைக்க அனுமதிக்க வேண்டும்.
மன உளைச்சல்
இந்தக் குழந்தை பிறக்கும் வரை கர்ப்பத்தில் உயிருடன் இருக்குமா? என்பது தெரியவில்லை. மேலும், 20 வாரங்களைக் கடந்து விட்டதால், கருவைக் கலைக்க மருத்துவர்கள் மறுப்பு தெரிவிக்கின்றனர். இதனால், மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்து இருந்தார்.
உச்சநீதிமன்றம் உத்தரவு
இந்த மனு மீதான விசாரணையின்போது, 24 மணி நேரத்திற்குள் பதில் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்தது. மருத்துவர்களின் ஆலோசனையையும் கேட்டது. டாக்டர்கள் அறிவுரையை தொடர்ந்து, அப்பெண் கருவை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது.
காரணம்
குழந்தைக்கும், தாய்க்கும் ஆபத்து என்ற டாக்டர்கள் பரிந்துரை அடிப்படையில், இந்த அனுமதியை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.