மருத்துவ நுழைவு தேர்வை ரத்து செய்யும் அவசர சட்டத்திற்கு தடை விதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்
டெல்லி: மருத்துவ கல்விக்கு இவ்வாண்டு நுழைவு தேர்வு நடத்துவதை ரத்து செய்து மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசர சட்டத்தை தடை செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த மாணவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
மருத்துவ படிப்புக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான நுழைவு தேர்வை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 6 மாநிலங்கள் தொடர்ந்த சீராய்வு மனுவின் மீதான விசாரணையிலும் பொது நுழைவு தேர்வுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
இம்மாநிலங்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்ததன் காரணமாக, 6 மாநிலங்களிலும் நுழைவு தேர்வை இவ்வாண்டு ரத்து செய்து அவசர சட்டம் பிறப்பிக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
சிறு இழுபறிக்கு பிறகு இந்த அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் ஒப்புதல் வழங்கினார். பிளஸ் டூ மதிப்பெண்ணை வைத்து கவுன்சிலிங் மூலம் மருத்துவ கல்லூரிகளில் இட சேர்க்கை நடைபெறும் தற்போதைய முறையே தமிழகத்தில் தொடரும் என்பதால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்நிலையில், அவசர சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, மத்திய பிரதேசத்தில் வியாபம் ஊழலை வெளியில் கொண்டு வந்த ஆனந்த் ராய் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று வழக்கு தொடர்ந்தார். இதை அவசர வழக்காக எடுத்துக் கொண்டு விசாரிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அவசர சட்டத்தை தற்போதைக்கு ரத்து செய்ய முடியாது என்று சுப்ரீம் கோர்ட் கூறிவிட்டது.
தேர்வில் இருந்து சில மாநிலங்களுக்கு மட்டுமே மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது. பொது நுழைவுத் தேர்வை மத்திய அரசு முழுமையாக மறுக்கவில்லை. தற்போதைய நிலையில் ஏதேனும் உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தால், அதனால் குழப்பமே ஏற்படும். எனவே இந்த மனு முடித்து வைக்கப்படுகிறது. இவ்வாறு உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.