கேஜ்ரிவாலுக்கு எதிரான 2 அவதூறு வழக்குகளை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் தடை!
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிரான 2 அவதூறு வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கெஜ்ரிவால் மீது மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்திலும், வழக்கறிஞரான சுரேந்திர குமார் சர்மா கர்கர்டூமா நீதிமன்றத்திலும் அவதூறு வழக்குகள் தொடர்ந்தனர். இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகளிலேயே நிதின் கட்காரி தான் மிகப்பெரிய ஊழல் அரசியல்வாதி என்று கூறிய கேஜ்ரிவால் மீது பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் கட்காரி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
அதே போல் தனது சமூக சேவை பணிகளை பாராட்டி 2013 ஆம் ஆண்டு டெல்லி தேர்தலில் போட்டியிடுமாறு கேட்டுக்கொண்ட ஆம் ஆத்மி கட்சி, பின்னர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை என்று கூறி சுரேந்திர குமார் சர்மா அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை குறித்து கெஜ்ரிவால் தரப்பு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சம்பந்தப்பட்ட நீதிமன்றங்கள் அவதூறு வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்ததுடன், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது. இவ்வழக்கின் அடுத்த விசாரணை வரும் ஜூன் மாதம் நடைபெறும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.