இந்த ஆண்டும் தாராளம்.. ஊழியர்களுக்கு கார், பிளாட்டுகளை தீபாவளி பரிசாக அள்ளி கொடுத்த சூரத் வியாபாரி!
சூரத்: இந்த வருடமும் தீபாவளி பரிசை கொடுத்து தனது ஊழியர்களை மகிழ்ச்சியில் திணறடிக்க தவறவில்லை சூரத் வைர வியாபாரி சவ்ஜி டோலாகியா.
கடந்த வருடம் தீபாவளியின்போது, தனது ஊழியர்கள் 491 பேருக்கு கார்களும், 200 ஊழியர்களுக்கு பிளாட்டுகளும் வழங்கி மகிழ்ச்சியில் திக்குமுக்காட செய்தவர்தான் இந்த சவ்ஜி டோலாகியா. இதன்மூலம் தேசிய அளவில் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தவர் இவர்.
இந்த வருடமும் சளைக்கவில்லை அவர். தனது நிறுவனங்களில் பணியாற்றும் 1716 பேரை, சிறந்த பணியாளர்கள் என தேர்வு செய்து அவர்களில், 400 பேருக்கு பிளாட்டுகளும், 1260 பேருக்கு கார்களும் தீபாவளி பரிசாக வழங்கியுள்ளார் சவ்ஜி டோலாகியா.
நேற்று நடைபெற்ற பணியாளர்களுடனான மீட்டிங்கில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டதாக சவ்ஜி டோலாகியா நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2011 முதல் 'ஹரே கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ்' எனும் பெயர் கொண்ட அவரது நிறுவனத்தில் வைத்து இந்த இன்ப பரிசுகள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படுவது வாடிக்கையாகியுள்ளது.
சவ்ஜி டோலாகியா அறிவித்துள்ள பரிசுகளின் மதிப்பு ரூ.51 கோடி இருக்குமாம். இருப்பினும் ஊழியர்கள் மகிழ்ச்சியே தனக்கு திருப்தி என்கிறார் இவர்.
இத்தனைக்கும் பில்லினியர் குடும்பத்தில் பிறந்தவர் கிடையாது சவ்ஜி. சிறு வயதில் மாமாவிடம் கடன் வாங்கி வைர வியாபாரம் தொடங்கி, படிப்படியாக இவ்வளவு உயர்ந்த இடத்திற்கு வந்துள்ளார். தனது மகன் திரவ்யாவுக்கு, பணத்திமிர் வந்துவிடக் கூடாது என்பதற்காக 3 செட் துணி, ரூ.7 ஆயிரம் பணம் மட்டுமே கொடுத்து கொச்சியில் தனிமையில் வசிக்க வைத்து உலகம் எப்படிப்பட்டது என்பதை புரிந்துகொள்ள பழக்கியவர் இவர். இவ்வாறு பணத்தின் மதிப்பு தெரிந்தால்தான், அதை கட்டிக்காப்பாற்றும் பொறுப்பு தனது மகனுக்கு வரும் என்பதற்காக அவ்வாறு செய்தார் சவ்ஜி டோலாகியா.