மீனவர் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு.. சுஷ்மா சுவராஜ் உறுதி
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் குழு இன்று மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினர். அப்போது தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் உறு
டெல்லி: இன்று காலை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை 15 பேர் கொண்ட மீனவர்கள் குழு சந்தித்து பேசியது. அப்போது மீனவர்கள் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று அமைச்சசர் உறுதியளித்துள்ளதாக மீனவர்கள் பிரதிநிதி அருளானந்தம் தெரிவித்தார்.
அண்மையில், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும், தொடர்ந்து மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். இந்தப் பிரச்சனை குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை நேரில் சந்தித்து பேச 15 பேர் கொண்ட மீனவர்கள் குழு டெல்லி சென்றது.
இன்று காலை அமைச்சர் சுஷ்மாவுடன் பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில் செய்தியாளர்களிடம் மீனவர் குழு பிரதிநிதி அருளானந்தம் கூறியதாவது:
பிரிட்ஜோ கொலைக்கு நீதி வேண்டும். இலங்கையில் இருக்கின்ற 139 படகுகளை விடுவிக்க வேண்டும். நிரந்தர தீர்வு ஏற்படுவதற்கான தீர்வு வேண்டும் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து பேசியுள்ளோம். மீனவர்கள் பிரச்சனையில் நிரந்தர தீர்வு எட்டப்படும் வரை குறிப்பிட்ட காலதிற்கு இலங்கை கடற்பகுதியில் அல்லது ராமேஸ்வரம் தொடங்கி நாகை வரை மீனவர்கள் மீன் பிடிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம்.
நாங்கள் சொன்னதை எல்லாம் விளக்கமாக அமைச்சர் கேட்டுக் கொண்டார். நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்துள்ளார் என்று அருளானந்தம் கூறினார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார்.