இலங்கைக்கு சுஷ்மா ஸ்வராஜ் இன்று பயணம்
டெல்லி: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இன்று இலங்கை பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை சுற்றுப்பயணத்திற்கான திட்டங்களுக்கு இறுதி வடிவம் கொடுக்க அவர் இலங்கை செல்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி வரும் 13-ந் தேதி இலங்கைக்கு செல்ல இருக்கிறார். 1987ஆம் ஆண்டுக்குப் பின்னர் கடந்த 28 ஆண்டுகளில் இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்கிற முதலாவது இந்திய பிரதமர் நரேந்திர மோடிதான்.
1987ஆம் ஆண்டு பிரதமராக இருந்த ராஜிவ் காந்தி இலங்கைக்கு சென்று இந்திய- இலங்கை ஒப்பந்தத்தை ஏற்படுத்தியிருந்தார்.
பிரதமர் மோடியின் இந்த பயணத்துக்கான திட்டங்களை மேற்கொள்ள சுஷ்மா ஸ்வராஜ் இன்று அந்நாட்டுக்கு செல்கிறார்.
அங்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துகிறார். அதேபோல் இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் மங்கள சமரவீரவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவையும் சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்துபேசுவார் என்றும் கூறப்படுகிறது.
கடந்த மாதம் தனது முதல் வெளிநாட்டுசுற்றுப்பயணமாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன இந்தியாவுக்கு வந்ததையடுத்து பிரதமர் மோடியின் சுற்றுப்பயணம் அமைந்துள்ளது.