பாக். மாணவிக்கு கர்நாடகாவில் எம்.பி.பி.எஸ். சீட் வாங்கிக் கொடுத்த சுஷ்மா ஸ்வராஜ்
டெல்லி: ஜெய்பூரில் வசிக்கும் பாகிஸ்தானை சேர்ந்த இந்து மாணவி மஷால் மகேஸ்வரிக்கு கர்நாடகாவில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில் சீட் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் உள்ள ஹைதராபாத்தை சேர்ந்தவர் மஷால் மகேஸ்வரி(19). அவரது தாயும், தந்தையும் மருத்துவர்கள். பாகிஸ்தானில் இந்துக்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்று அஞ்சி அவரின் குடும்பத்தார் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூருக்கு வந்துவிட்டனர்.
நீண்ட கால விசாவில் வந்துள்ள மகேஷ்வரியின் பெற்றோர் ஜெய்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிகிறார்கள். இந்நிலையில் இந்த ஆண்டு ப்ளஸ் 2 தேர்வு எழுதிய மகேஷ்வரி 91 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தனது பெற்றோரை போன்றே மருத்துவராக விரும்பும் அவருக்கு அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டது.
அந்த தேர்வை எழுத இந்திய குடிமக்கள் மற்றும் என்.ஆர்.ஐ.க்களுக்கு தான் அனுமதி உள்ளது. இந்நிலையில் நீண்ட கால விசாவில் வந்துள்ள மகேஸ்வரியால் தேர்வை எழுத முடியவில்லை. இதையடுத்து தனக்கு உதவி செய்யுமாறு அவர் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்தார்.
இது குறித்து அறிந்த ஊடகங்கள் மகேஸ்வரியிடம் பேட்டி எடுத்து அதை தொலைக்காட்சி சேனல்களில் வெளியிட்டன. அதை பார்த்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ட்விட்டரில் தனது தொலைபேசி எண்ணை அளித்து மகேஸ்வரியை தன்னை தொடர்பு கொள்ளுமாறு கூறினார். இதையடுத்து அவரை தொடர்பு கொண்டு பேசிய மகேஸ்வரிக்கு கர்நாடகாவில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில் சீட் வாங்கிக் கொடுத்துள்ளார்.
இது குறித்து மகேஸ்வரி கூறுகையில்,
கர்நாடகாவுக்கு அனுப்ப என் பெற்றோர் தயங்குகிறார்கள். அந்த மாநிலம், மொழி ஆகிய இரண்டுமே புதிது. ராஜஸ்தானில் அட்ஜஸ்ட் ஆகவே எங்களுக்கு இரண்டு ஆண்டுகள் ஆனது என்றார்.