சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 10 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு: சுஷ்மா
சோமாலி நாட்டில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 10 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட்டனர்.
டெல்லி: சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்ட 10 இந்தியர்களும் மீட்கப்பட்டதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த கப்பல் மற்றும் அதிலிருந்த மாலுமிகள் உள்ளிட்ட 10 பேர் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடந்த வாரம் கடத்தப்பட்டனர். இந்நிலையில், ஒரு வாரத்திற்கு பிறகு அந்த கப்பலை சோமாலிய பாதுகாப்புப் படை அதிகாரிகள் நேற்று முன்தினம் மீட்டனர்.
அதன் தொடர்ச்சியாக, சோமாலிய கடற்கொள்ளையர்களின் பிடியில் இருந்த இந்தியர்கள் 10 பேரும் இன்று மீட்கப்பட்டுள்ளனர். இதனை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், அவரது டிவிட்ட்ர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது டிவிட்டரில், எம்.வி.ஏஎல் குஷார் கப்பலில் பயணம் செய்த போது கடத்தப்பட்ட 10 இந்தியர்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்பதற்கு உறுதுணையாக இருந்த சோமாலிய அரசு மற்றும் கால்முடக் மாநில அதிகாரிகள் மற்றும் மக்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், கென்யாவிற்கான இந்திய உயர் ஆணையர் சுசித்ரா துரையின் முயற்சிக்கு, சுஷ்மா பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.