ஆளுநருக்கு காயம் ஏற்படுத்தவில்லை: சஸ்பென்ட் ஆன மகாராஷ்டிரா காங். எம்.எல்.ஏக்கள் விளக்கம்
மும்பை: மகாராஷ்டிரா மாநில ஆளுநர் வித்யாசகர் ராவுக்கு காயம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளவில்லை என்று அம்மாநில சட்டசபையில் இருந்து 2 ஆண்டுகாலம் சஸ்பென்ட் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
மகாராஷ்டிரா சட்டசபையில் அமளியில் ஈடுபட்டு ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு காயம் ஏற்படுத்தியதாக காங்கிரசை சேர்ந்த ராகுல் போந்த்ரே, ஜெய்குமார் கோரே, விரேந்திர ஜெக்தாப், அப்துல் சத்தார் மற்றும் அமர் கலே ஆகிய 5 எம்.எல்.ஏ.க்கள் 2 ஆண்டுகளுக்கு சஸ்பென்ட் செய்யப்பட்டு உள்ளனர்.
இந்தநிலையில் தங்கள் மீதான குற்றச்சாட்டை அவர்கள் திட்டவட்டமாக மறுத்தனர். மும்பையில் செய்தியாளர்களிடம் 5 எம்.எல்.ஏ.க்களும் கூறியதாவது:
எங்கள் மீதான மொத்த புகாருமே பாரதிய ஜனதா அரசால் ஏற்படுத்தப்பட்ட சதிசெயல் ஆகும். எங்கள் மீதான குற்றச்சாட்டை உறுதிப்படுத்த பாஜக எம்.எல்.ஏ. கிரிஷ் மகாஜனிடம் சாட்சியம் பெறப்பட்டது.
ஆனால் எங்கள் தரப்பு வாதத்தை எடுத்துரைக்க எங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆளுநரைத் தாக்கியதாக கூறப்படும் இடத்தில் கிரிஷ் மகாஜன் இருந்தது சந்தேகத்துக்கு உரியது. அவர் என்ன ஆளுநரின் பாதுகாவலரா? அவர் எப்படி அங்கே வந்தார்?
சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்தில் செய்தியாளர்களும் இருந்தீர்கள். இதனால் நீங்கள் தான் உண்மையை விசாரிக்க வேண்டும். விசாரணைக்கு பின்னர் நாங்கள் அப்பாவி என்பது தெரியவரும்.
பாஜக அரசு எங்களை 2 ஆண்டுகளுக்கு சபையை விட்டு வெளியேற்றினால், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வோம். பாஜக அரசின் தவறான செயல்களை பொதுமக்களிடம் விளக்கி கூறுவோம்.
இவ்வாறு சஸ்பென்ட் செய்யப்பட்ட 5 எம்.எல்.ஏக்களும் தெரிவித்தனர்.