தூய்மை இந்தியா திட்டத்தில் கட்டப்பட்டு சும்மா கிடக்கும் 50% கழிப்பறைகள்.. ஒரு ஷாக் ரிப்போர்ட்
டெல்லி: தூய்மை இந்தியா திட்டத்தின் படி நாட்டில் கட்டப்பட்ட சுமார் ஒரு கோடி கழிப்பறைகளில் பாதிக்கு பாதியை கூட மக்கள் சரிவரப் பயன்படுத்துவதில்லை என்ற அதிர்ச்சித் தகவல் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
மத்தியில் மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைத்த பிறகு, தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தை விளம்பரப் படுத்தும் வகையில், பிரதமர் மோடி முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி, நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்தில் பலர் பங்கேற்று சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதன்படி, அனைவருக்கும் கழிவறை வசதியை ஏற்படுத்தித் தரும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
ஆனால், இவ்வாறு கட்டப்பட்ட கழிப்பறைகளில் பெரும்பாலானவைகள் புழக்கத்தில் இல்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
ஆபத்துகள்...
வீடுகளில் கழிப்பறை இல்லாத காரணத்தால் மக்கள் திறந்த வெளியில் மலம் கழிக்கச் செல்கின்றனர். இதனால் நோய்த் தொற்று மட்டுமின்றி, பெண்களும், சிறுமிகளும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் நிலையும் ஏற்படுகிறது.
ஒரு கோடி புதிய கழிப்பறைகள்...
எனவே, எல்லாருக்கும் கழிப்பறை வசதியை ஏற்படுத்தித் தரும் இலக்கோடு தூய்மை இந்தியா திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் படி, இந்தியாவில் புதிய கழிப்பறைகளின் எண்ணிக்கை ஒரு கோடியாக அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
பேருக்கு மட்டும்...
ஆனால், பெயரளவிற்கு கழிப்பறையை கட்டி வைத்துள்ள மக்கள், அவற்றை முறையாகப் பயன்படுத்துவதில்லை என்கிறது என்.எஸ்.எஸ்.ஓ. ஆய்வு. கிராமப்புறங்களில் கட்டப்பட்டுள்ள 95 லட்சம் கழிப்பறைகளில் 46 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப் படுவதாக இந்த ஆய்வு கூறுகிறது.
மற்றுமொரு அறையே...
அதோடு, கிராமங்களில் கழிவறைகளை பொருட்களைப் போட்டு வைக்கும் மற்றொரு அறையாக மக்கள் பயன்படுத்துவதாகவும், வழக்கம்போல திறந்தவெளியையே அவர்கள் மலம் கழிக்கப் பயன்படுத்துவதாகவும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அனைவருக்கும் கழிப்பறை...
மத்தியஅரசு, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வரும் 2019 ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்டிமுடிக்க உறுதி ஏற்று நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. ஆனால், அவ்வாறு கழிப்பறைகள் கட்டப்பட்டாலும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டால் மட்டுமே நிஜமான ‘தூய்மை' இந்தியா உருவாகும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து.
முதலிடம்...
உலகளவில் சுகாதாரமற்ற கழிவறைகளை பயன்படுத்தும் நாடுகள் மற்றும் திறந்தவெளியில் மலம் கழிப்பவர்கள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.