ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனை நீக்க வலியுறுத்தி மோடிக்கு சு.சுவாமி மீண்டும் கடிதம்
டெல்லி: ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து ரகுராம் ராஜனை நீக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் பதவி காலம் வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதனையடுத்து அவரது பதவியை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை ஆலோசித்து வருகிறது.
சு.சுவாமி முதல் கடிதம்
ஆனால் ரகுராம் ராஜனை அப்பதவியில் இருந்து உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தி வருகிறார். மேலும் ரகுராம் ராஜன் மனதளவில் முழுமையான இந்தியராக இல்லை; திட்டமிட்டு இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கிறார்; ஆகையால் ரிசர்வ் வங்கி ஆளுநர் பொறுப்பில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு அண்மையில் சுப்பிரமணியன் சுவாமி ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
காங்கிரஸ் காட்டம்
இது குறித்து கருத்து தெரிவித்திருந்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி, ரகுராம் ராஜன் மீதான குற்றச்சாட்டுகளை தனிநபர் சார்ந்ததாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இந்திய ரிசர்வ் வங்கி மீதான விமர்சனமாகவே கருதவேண்டும். ரிசர்வ் வங்கி ஆளுநராக இருப்பவரை இவ்வாறு விமர்சிப்பது முன்னெப்போதும் நிகழ்ந்ததில்லை. இந்த விவகாரத்தில் மோடி எதுவும் பேசாமல் இருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது எனக் கூறியிருந்தார்.
மோடியுடன் சந்திப்பு
இந்த நிலையில் பிரதமர் மோடியை ரகுராம் ராஜன் நேற்று திடீரென சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது சுப்பிரமணியன் சுவாமி முன்வைத்து வரும் விமர்சனங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
மோடிக்கு 2-வது கடிதம்
இதனிடையே இன்று 2-வது முறையாக பிரதமர் மோடிக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் ரகுராம் ராஜன் மீது 6 குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவரை உடனே ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையாமல் இருப்பதற்கு ரகுராம் ராஜனே காரணம் என்றும் அமெரிக்காவின் நலன் சார்ந்தே அவர் செயல்படுகிறார்; நாட்டின் உயரிய பதவியில் இருந்து அமெரிக்காவின் கிரீன் கார்டை புதுப்பித்துக் கொள்ள அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்கிறார் எனவும் அந்த கடிதத்தில் சுப்பிரமணியன் சுவாமி சுட்டிக்காட்டியுள்ளார்.