பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை 407 பேர் பலி ... குஜராத்தில் ஒரே நாளில் 8 பேர் மரணம்
அகமதாபாத்: இந்தியாவில் பன்றிக்காய்ச்சலுக்கு உயிரிழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி 1முதல் பிப்ரவரிவரை பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 407 ஆக அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஹெச்1என்1 எனப்படும் பன்றிக்காய்ச்சல் நோய் குஜராத் மாநிலத்தில் அதிவேகமாக பரவி வருகிறது. இன்று ஒரேநாளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து இக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 116 ஆக உயர்ந்துள்ளது.
தீயாய் பரவுது
குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச், அகமதாபாத், சூரத், வதோதரா, தாடி, நர்மதா ஆகிய மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது.
இன்று அகமதாபாத்தில் மூன்று பேர், வதோதரா, தகோத் மாவட்டங்களில் தலா இரண்டு பேர் மற்றும் சூரத்தில் ஒருவர் என ஒரே நாளில் எட்டு பேர் பலியாகியுள்ளனர்.
பலி எண்ணிக்கை உயரும்
குஜராத்தில் புதிதாக 123 பேருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் புதிதாக 17 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை இன்னும் உயரும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நடவடிக்கை
தமிழகத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர். வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருபவர்களை தீவிரமாக கண்காணித்து இந்த நோய் பரவுவதை தடுக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்றாலும் இந்த காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மாணவர்களுக்கு விழிப்புணர்வு
சென்னையில் உள்ள பல்வேறு பள்ளி மாணவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இந்த காய்ச்சலுக்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள் பற்றிய விளக்கம் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கு மாஸ்க்
சூளைமேட்டில் உள்ள தனியார் பள்ளி ஒன்று அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் மாஸ்க் அணிந்து வருமாறு அனைத்து மாணவர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கு வரவேண்டாம்
பன்றி காய்ச்சல் அறிகுறியான சளி, தொண்டை புண், காய்ச்சல், தும்மல் உள்ளவர்கள் அதில் இருந்து குணமாகும் வரை வீட்டிலேயே இருங்கள். பள்ளிக்கு வரவேண்டாம் என்ற அறிவிப்பு நோட்டீஸ்களை பள்ளி நிர்வாகம் மாணவ, மாணவிகளிடம் வினியோகித்து வருகிறது.
பீதி கிளப்பாதீங்க
மாணவிகள் முகமூடி அணியுமாறு எந்த பள்ளிக்கும் மாநகராட்சி உத்தரவிடவில்லை என்று மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது மாதிரியான செயல்கள் பீதியை ஏற்படுத்தக்கூடியவை என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஏழு ஆண்டுகளில்
பன்றிக்காய்ச்சல் நோயால் இந்தியாவில் 2009ஆம் ஆண்டில் 981 பேரும் 2010ஆம் ஆண்டில் 1,763 பேரும் 2011ஆம் ஆண்டில் 75 பேரும் 2012 ஆம் ஆண்டு 405 பேரும் உயிரிழந்தனர். 2013ஆம் ஆண்டு பன்றிக்காய்ச்சலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 609 ஆக குறைந்தது. அதேசமயம் கடந்த ஆண்டு 238 பேர் மட்டுமே பன்றிக்காய்ச்சலுக்கு பலியானதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
2015ல் பலி எண்ணிக்கை அதிகம்
பிப்ரவரி 1முதல் 10ஆம் தேதிவரை மட்டும் இதுவரை பன்றிக்காய்ச்சலுக்கு 216 பேர் பலியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 5157 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
407 பேர் மரணம்
தெலுங்கானா, ராஜஸ்தான், டெல்லி, குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் மிக, மிக வேகமாக பரவியபடி உள்ளது. கடந்த ஜனவரி 1முதல் பிப்ரவரி 10 வரை நாடுமுழுவதும் 407 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகரிக்கும் பீதி
ராஜஸ்தானில் பன்றிக் காய்ச்சலால் 1,404 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இம்மாநிலத்தில் மட்டும் இதுவரை 117 பேர் இந்நோய்க்கு பலியானதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. பன்றிக்காய்ச்சல் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்களிடையே பீதி அதிகரித்து வருகிறது.