ரூ.41,000 வாங்கிக் கொண்டு பலாத்காரம் செய்யப்பட்டதை மறந்துவிடு: பெண்ணை அதிர வைத்த பீகார் பஞ்சாயத்து!
பாட்னா: ரூ.41 ஆயிரத்தை வாங்கிக் கொண்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை மறந்துவிடுமாறு பீகார் பஞ்சாயத்து மகாதலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணிடம் தெரிவித்துள்ளது.
பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தில் உள்ள கோதா கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் ரவிதாஸ், நரேஷ் ரவிதாஸ் ஆகியோர் அதே கிராமத்தைச் சேர்ந்த திருமணமான மகாதலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை இந்திரா ஆவாஸ் யோஜகனா திட்டம் குறித்த ஆவணங்களை தயார் செய்ய பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வருமாறு கடந்த மாதம் கூறியுள்ளனர். இதையடுத்து பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வந்த அந்த பெண்ணை பிரகாஷ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதையடுத்து பஞ்சாயத்து கூட்டப்பட்டது. பஞ்சாயத்தார் கூடி பிரகாஷை அந்த பெண்ணுக்கு ரூ.41 ஆயிரம் ரொக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டனர். பணத்தை பெற்றுக் கொண்டு பலாத்கார சம்பவம் பற்றி போலீசில் புகார் அளிக்கக் கூடாது என்று அந்த பெண்ணுக்கு உத்தரவிட்டனர். ஆனால் பிரகாஷ் பணம் கொடுக்க மறுத்தார். இதை எதிர்த்து கேட்ட பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மீது தீ வைத்தார் பிரகாஷ். இதில் அந்த பெண்ணின் கணவர் படுகாயம் அடைந்தார்.
இந்த சம்பவத்தை அடுத்து அந்த பெண் நரேஷ் மற்றும் பிரகாஷ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நரேஷை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள பிரகாஷை தேடி வருகின்றனர்.
முன்னதாக கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் 4 சகோதரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 7 மாதம் கர்ப்பமான சிறுமியை ரூ.50 ஆயிரம் பெற்றுக்கொண்டு கருவை கலைக்க பஞ்சாயத்து உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.