சசிகலா குடும்பத்தினரை வெளியேற்றினால் தான் பேச்சுவார்த்தை.. ஓபிஎஸ் திட்டவட்டம்!
சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து வெளியேற்றினால்தான் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
டெல்லி: சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து வெளியேற்றினால்தான் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக தொண்டர்கள் இயக்கமாக செயல்படவேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி சென்றுள்ள ஓபிஎஸ் அணியினர் தேர்தல் ஆணையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பதவியை நிரப்ப வேண்டும், டிடிவி தினகரன், சுகேஷ் ஆகியோரிடம் நடத்தப்படும் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதைத்தொடர்ந்து டெல்லியில் ஓபிஎஸ் தலைமையில் அவரது அணியினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இரு அணிகள் இணைவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
கோட்பாட்டிலிருந்து விலகவில்லை
அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தத்தின் அடிப்படை கோட்பாட்டிலிருந்து விலகவில்லை என்றார். இன்னமும் அதிமுகவின் ஆதரவு நாளிதழான நமது எம்ஜிஅர் பொதுச்செயலாளர் என சசிகலா பெயரை குறிப்பிட்டும் துணைப் பொதுச்செயலாளர் என டிடிவி தினகரனின் பெயரை குறிப்பிட்டும் செய்தி வெளியிடுவதாக தெரிவித்தார்.
சசி குடும்பத்தை நீக்கினால்தான்..
சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்கினால்தான் பேச்சுவார்த்தைக்கு முடிவு வரும் என்றும் அவர் கூறினார். கட்சி எந்த குடும்பத்தின் கட்டுப்பாட்டிலும் செல்லக்கூடாது என்றும் அவர் கூறினார்.
தொண்டர்கள் இயக்கமாக..
அவர்களின் குடும்பத்திற்கும் கட்சி செல்லக்கூடாது, எங்களின் குடும்பத்திற்கும் கட்சி வந்துவிடக் கூடாது. அதிமுக எப்போதும் தொண்டர்கள் இயக்கமாக செயல்பட வேண்டும்.
மக்களுக்கு தெரியும்..
அதிமுகவை தொண்டர்கள் இயக்கமாக மீட்டெடுப்போம் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். பேச்சுவார்த்தை யாரால் தடைபடுகிறது என்பது மக்களுக்கு தெரியும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.