டெல்லியில் ஓபிஎஸ் தங்கியுள்ள தமிழ்நாடு இல்லம் முற்றுகை.. தமிழ் அமைப்பினர் போராட்டத்தால் பதட்டம்
ஜல்லிக்கட்ட நடத்த வலியுறுத்தி டெல்லியில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தங்கியுள்ள இல்லத்தை தமிழ் அமைப்பினர் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லி: ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக பிரதமரை சந்திக்க சென்றுள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ளார். அவர் தங்கியுள்ள பகுதியை முற்றுகையிட்ட தமிழ் அமைப்பினர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்குமாறு முழக்கமிட்டனர்.
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப்போட்டிகள் நடத்தப்பட வில்லை.
இதனைக் கண்டித்தும் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தியும் சென்னை, மதுரை உட்பட மாநிலம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அனைத்து தரப்பினரும் போராட்டடத்தில் குதித்துள்ளதால் அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றுள்ளார். இன்று காலை 10.30 மணிக்கு பிரதமரை சந்திக்க உள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ளார்.
இந்நிலையில் டெல்லி தமிழ்நாடு இல்லத்தை தமிழ் அமைப்பினர் மற்றும் இளைஞர்கள் முற்றுகையிட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு நடைபெற பிரதமரிடம் அழுத்தம் தர வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.