எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக டெல்லியில் மாணவர்கள் போராட்டம்!
டெல்லி: எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு ஆதரவு தெரிவித்து டெல்லியில் மாணவர்கள் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர்.
எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் என்ற நாவலில் இடம்பெற்ற திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆலய திருவிழா சடங்கு குறித்த பகுதிக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.
இதைத்தொடர்ந்து எழுத்தாளர் பெருமாள்முருகன் நாமக்கல் மாவட்ட வருவாய்த்துறை அலுவலரிடம் தன்னுடைய நாவலை திரும்ப பெற்றுக்கொள்வதாக அறிவித்து கடிதம் கொடுத்தார்.
இதன் பின்னர் பெருமாள்முருகன் என்ற படைப்பாளி செத்துவிட்டான் என்ற அறிக்கையை அவரே முகநூல் கணக்கில் வெளியிட்டார். இதில் வேதனை அடைந்த அவரது ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாக போராட்டங்களில் குதித்துள்ளனர்.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் முன்பு நேற்று மாணவர் அமைப்புகள் சார்பில் எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு ஆதரவு தெரிவித்தும், அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கம், அகில இந்திய மாணவர் சங்கம் மற்றும் ஜனநாயக மாணவர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
அம்பேத்கர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ராஜன் குறை கிருஷ்ணன், ரவீந்திரன் ஸ்ரீராமச்சந்திரன், மாணவர் தலைவர்கள் வி.லெனின் குமார், கே.பயாஸ் அகமது ஆகியோர் கண்டன உரையாற்றினர்.