காவிரி.. மாநில அரசுகள் சார்பில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆஜராக சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி: காவிரி வழக்கில் மாநில அரசுகள் சார்பில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. கர்நாடகா, கேரளா, தமிழகம் ஆகிய மாநிலங்கள் வழக்கில் வாதாடிவிட்ட நிலையில், மத்திய அரசின் வழக்கறிஞர் நேற்று வாதம் முன் வைத்தார்.
மத்திய அரசை நம்ப முடியாது என்பதால் உச்சநீதிமன்றமே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தமிழக அரசு முன்வைத்த முக்கிய கோரிக்கை.
இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, காவிரி வழக்கில் மாநில அரசுகள் சார்பில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
காவிரி வழக்கில் தொழில்நுட்பரீதியான வாதங்களை காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் சுப்ரமணியன் வாதிடுவார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப வல்லுநர்கள், காவிரி பாசன பகுதி, அதன் நீர் போக்கு, ஆண்டு மழை விவரங்கள் உள்ளிட்ட பல விவரங்களை வைத்திருப்பார்கள் என்பதால் அவர்கள் வாதத்தை கேட்டு, தீர்ப்பு வழங்க உச்சநீதிமன்றம் விரும்புகிறது.