அனுமதி மறுக்கப்பட்டும் பெங்களூரில் போராட்டம் நடத்திய தமிழர்கள் #Jallikattu
பெங்களூரு: அனுமதி மறுக்கப்பட்டபோதிலும் பெங்களூர் தமிழர்கள் அல்சூர் தமிழ்ச் சங்கம் முன்பு இன்று அமைதியான முறையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடினர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பெங்களூர் அல்சூர் பகுதியில் உள்ள தமிழ்ச் சங்கம் முன்பு போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் தமிழர்கள் இன்று காலை தமிழச் சங்கம் முன்பு கூடினர்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தானே என்று வீட்டில் இல்லாமல் காலையிலேயே போராட வந்துவிட்டனர்.
போராட்டம்
அனுமதி இல்லாததால் அவர்கள் சாலையோரம் உள்ள நடைபாதையில் நின்று அமைதியான முறையில் போராடினர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை அவர்கள் கையில் பிடித்திருந்தனர்.
ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு தானே வேண்டுமே தவிர தற்காலிக தீர்வான அவசர சட்டம் தேவையில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நிரந்தர தீர்வு
போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் கூறுகையில், நான் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் சொந்த ஊருக்கு பக்கத்து ஊருக்காரன். ஜல்லிக்கட்டு என்றால் தமிழர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பது எனக்கு நன்கு தெரியும். ஜல்லிக்கட்டுக்காக போராடி வரும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்றார்.
அவசர சட்டம்
இந்த அவசர சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடரலாம் என்பதால் இதனால் என்ன பயன்? அவசர சட்டம் தீர்வாகாது. இது எங்களுக்கு வேண்டாம். எங்களுக்கு நிரந்தர தீர்வு மட்டுமே வேண்டும் என போராட்டத்தில் கலந்து கொண்ட மற்றொருவர் தெரிவித்தார்.