பதவி பறிப்பை எதிர்த்து சைரஸ் மிஸ்திரி சட்ட போராட்டம்? சீனியர் வக்கீல்களுடன் டாடா நிர்வாகிகள் ஆலோசனை
டெல்லி: டாடா சன்ஸ் நிறுவன தலைவர் பதவியிலிருந்து சைரஸ் மிஸ்திரி திடீரென நீக்கப்பட்டதால் அவர் நீதிமன்றத்திற்கு செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே, ப.சிதம்பரம், ஹரிஷ் சால்வே உள்ளிட்ட சட்ட வல்லுநர்களிடம் டாடா நிறுவனம் சட்ட ஆலோசனைகளை கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராகவும் பதவி வகித்தவர் என்பதால், தொழில்துறையின் நெளிவு, சுளிவுகள், சட்டங்கள் குறித்து அவருக்கு நன்கு தெரியும். அவர் வழக்கறிஞருமாக இருப்பதால் கூடுதல் சிறப்பு. அதேபோல ஹரிஷ் சால்வே, அபிஷேக் மனு சிங்வி, மோகன் பராசரன் போன்ற புகழ் பெற்ற வழக்கறிஞர்களிடமும் டாடா நிறுவனம் கருத்து கேட்டு வருகிறது.
உச்சநீதிணந்ற முன்னாள் நீதிபதி ஆர்.வீ.ரவீந்திரனிடமும் டாடா நிறுவனம் கருத்து கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மிகப்பெரிய நிறுவனங்களின், மிகப்பெரிய பொறுப்புகளில் இருந்து சிலர் நீக்கப்படும்போது இதுபோல சட்ட வல்லுநர்கள் ஆலோசனைகள் கேட்கப்படுவது வழக்கம் என சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
பாம்பே ஹைகோர்ட் பாரின் மூத்த ழக்கறிஞர் இக்பால் சக்லா மகளைத்தான் மிஸ்திரி திருமணம் செய்துள்ளார். மிஸ்திரியின் சகோதரரும், ஒரு வழக்கறிஞர் குடும்பத்தில் பெண் எடுத்தவராகும். எனவே மிஸ்திரி தரப்பும் சட்ட நுணுக்கங்களை அறிந்து வைத்திருக்கும் என்பதால் டாடா நிறுவனம் பதற்றத்தில் உள்ளதாம்.