எம்.எல்.சி. தேர்தலில் லஞ்சம்: கைதான மற்றொரு தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.வுக்கு 14 நாள் ஜெயில்
ஹைதராபாத்: எம்.எல்.சி. தேர்தலில் லஞ்சம் கொடுத்ததாக கைது செய்யப்பட்ட மற்றொரு தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. சந்திரா வெங்கடா வீரய்யா 14 நாள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தெலுங்கானா மாநில மேலவைக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் போது நியமன எல்.எல்ஏ ஸ்டீபன்சனுக்கு தெலுங்கு தேச எம்.எல்.ஏ ரேவந்த் ரெட்டி லஞ்சம் தரமுயன்றார் என குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக அந்த நியமன எம்.எல்.ஏ. போலீசில் புகார் செய்தார். இந்த புகாரையடுத்து, ரேவந்த் ரெட்டியையும் மேலும் இருவரையும் தெலுங்கானா மாநில ஊழல் தடுப்பு பிரிவு கைது செய்து சிறையில் அடைத்தது.
அதன் பின்னர் அவர்கள் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று விடுதலை ஆகினர். இந்நிலையில், கம்மம் மாவட்டம் சட்டுப்பள்ளி தொகுதி தெலுங்கு தேச எம்.எல்.ஏ.வான சந்திரா வெங்கடா வீரய்யா இந்த வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டார்.
தங்கள் முன் ஆஜராக வேண்டும் என்று ஊழல் தடுப்பு பிரிவு அவருக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இது தொடர்பாக ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் முன் நேற்று ஆஜரான அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்திய பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
இன்று அவர் ஊழல் தடுப்பு தனிநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வீரய்யாவிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் விசாரணை காவலில் அவரை ஒப்படைக்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். இதற்கு வீரய்யாவின் வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். இதன் பின்னர் அவரை வரும் 21-ம் தேதி வரை சிறையில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.