ஓபிஎஸ், மதுசூதனன் உயிருக்கு ஆபத்து! மத்திய படை பாதுகாப்பு தர கோரி ராஜ்நாத்சிங்கிடம் வலியுறுத்தல்!!
ஓபிஎஸ், மதுசூதனன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால் மத்திய படை பாதுகாப்பு கோரி உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் ஓபிஎஸ் அணி எம்பிக்கள் மனு கொடுத்துள்ளனர்.
டெல்லி: முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் மதுசூதனன் உள்ளிட்டோர் உயிருக்கு ஆபத்து இருப்பதால் மத்திய படை பாதுகாப்பு அளிக்கக் கோரி உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் ஓபிஎஸ் அதிமுக எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
அதிமுக தலைமையகத்தில் கையை வைத்தால் ஓபிஎஸ்-க்கு கை இருக்காது என பகிரங்கமாகவே கொலை மிரட்டல் விடுத்தார் சசிகலா அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ. கலைராஜன். இதன் பின்னர் தேனி அருகே ஓபிஎஸ் வாகனம் மீது சரமாரியாக கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதேபோல் ஆர்.கே.நகரில் போட்டியிடும் ஓபிஎஸ் அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஓபிஎஸ் அதிமுகவின் 11 எம்.எபிக்கள் இன்று டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து பேசினர்.
மைத்ரேயன் தலைமையில் ஓபிஎஸ் அதிமுக எம்.பி.க்கள் ராஜ்நாத் சிங்கை சந்தித்து ஓபிஎஸ் மற்றும் மதுசூதன் உயிருக்கு ஆபத்து இருப்பதை விவரித்தனர். மேலும் இருவருக்கும் மத்திய படை பாதுகாப்பு தர வேண்டும் என்றும் இச்சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது.
இன்றைய சந்திப்பில் ஓபிஎஸ் ஆதரவு மதுரை எம்.பி. கோபாலகிருஷ்ணன் கலந்து கொள்ளவில்லை. அவர் உடல்நலக் குறைவால் வரவில்லை என மைத்ரேயன் எம்.பி. விளக்கம் அளித்தார்.