டீஸ்டா செதல்வாட்டின் 'சப்ரங் என்.ஜி.ஓ.' அனுமதியை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு!
டெல்லி: குஜராத் சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட்டின் சப்ரங் என்ற என்.ஜி.ஓ.வுக்கான அனுமதியை மத்திய அரசு ரத்து செய்ய உள்ளது. அதேபோல் டீஸ்டாவின் மற்றொரு என்.ஜி.ஓ.வான சி.ஜே.பி.யும் இனி வெளிநாட்டு நிதி உதவி பெற வேண்டுமானால் உள்துறை அமைச்சகத்திடம் கண்டிப்பாக அனுமதி பெற்றாக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
குஜராத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் செதல்வாட், 2002ஆம் ஆண்டு கோத்ரா கலவரங்களை வெளி உலகுக்கு அம்பலப்படுத்தியவர்களில் முக்கியமானவர். டீஸ்டா செதல்வாட்டின் சப்ரங்க் கம்யூனிகேஷன்ஸ் பப்ளிசிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மற்றும் என்.ஜி.ஓ. அமைப்புகள் வெளிநாட்டில் இருந்து பெறப்பட்ட நிதி உதவியை இந்திய அரசுக்கு எதிரான பிரசாரத்துக்கு பயன்படுத்தியதாக குஜராத் அரசு புகார் அளித்தது.
இதனடிப்படையில் உள்துறை அமைச்சகம் விசாரணைகளை நடத்தி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் செதல்வாட்டின் என்.ஜி.ஓ. தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விசாரணையில் சப்ரங் என்.ஜி.ஓ. ஏராளமான விதிமீறல்களில் ஈடுபட்டதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து ஏராளமான நிதி உதவியைப் பெற்று உரிய நோக்கத்துக்கு பயன்படுத்தாமல் அதனை இந்திய அரசுக்கு எதிராகவும் முறைகேடாகவும் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் டீஸ்டா செதல்வாட்டின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது கூட, இப்படி பெறப்பட்ட நிதி மூலம் அழகு சாதனப் பொருட்கள், ஒயின்கள் என சொகுசாக வாழ்க்கை நடத்தியிருக்கிறார்; இதற்காக ரோம் மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் இருந்து செதல்வாட் பொருட்கள் வாங்கியதற்கான ரசீதுகள் கிடைத்திருக்கின்றன என்று மத்திய அரசுத் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
அதாவது சி.ஜே.பி எனப்படுகிற சட்ட உதவி நிறுவனத்துக்கு நிதி பெற்றுக் கொண்டு அந்த என்.ஜி.ஓவுக்கு குறைவான தொகையை ஒதுக்கிவிட்டு சப்ரங் நிறுவனத்துக்கு ஏராளமான பணத்தை செலவழித்திருக்கிறார் டீஸ்டா செதல்வாட். இது சி.பி.ஐ. விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதால் சப்ரங் என்.ஜி.ஓ.வின் பதிவு அனுமதியை ரத்து செய்வதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான நோட்டீஸ் அடுத்த வாரம் டீஸ்டாவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
அப்படி சப்ரங் என்.ஜி.ஓ.வின் பதிவு அனுமதி ரத்து செய்யப்பட்டால் அந்த நிறுவனம் இனி வெளிநாட்டில் இருந்து எந்த ஒரு நிதி உதவியையும் பெற முடியாது. அதேநேரத்தில் டீஸ்டாவின் மற்றொரு என்.ஜி.ஓவான சி.ஜே.பி. இனி எந்த ஒரு வெளிநாட்டு நிதி உதவி பெற்றாலும் அது உள்துறை அமைச்சகத்தின் அனுமதியைப் பெற்றே ஆக வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைகள் டீஸ்டா செதல்வாட்டுக்கு பெரும் நெருக்கடியை எற்படுத்தியுள்ளது.