சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட்டுக்கு நெருக்கடி முற்றுகிறது.. உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியது!
காந்தி: சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட் நடத்தி வரும் என்.ஜி.ஓக்களுக்கான வெளிநாட்டு உதவி குறித்து விளக்கம் கேட்டு உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸுக்கு அவரது நிறுவனங்கள் அளிக்கும் பதிலைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளும் என கூறப்படுகிறது.
குஜராத்தில் சப்ரங் கம்யூனிகேஷன்ஸ் அண்ட் பப்ளிஷிங் பிரைவேட் லிமிடெட் என்பது உள்ளிட்ட என்.ஜி.ஓக்களை நடத்தி வருகிறார் டீஸ்டா செதல்வாட். இவரது என்.ஜி.ஓக்கள் வெளிநாட்டில் இருந்து நிதி உதவி பெறுகின்றன.
இந்த நிதி உதவியைப் பெற்றுக் கொண்டு இந்தியாவுக்கு எதிரான பிரசாரங்களை டீஸ்டா செதல்வாட் மேற்கொள்கிறார் என்பது மத்திய அரசின் குற்றச்சாட்டு. இதனைத் தொடர்ந்து செதல்வாட்டின் என்.ஜி.ஓக்களுக்கு உள்துறை அமைச்சகம் 4 கேள்விகளை எழுப்பி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அந்த நோட்டீஸில் வெளிநாட்டு நிதி உதவி பெற்றது, அந்த நிதி உதவியை வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கு கொடுத்தது, விதிகளை மீறி வேறு செயல்களுக்கு பயன்படுத்தியது ஆகியவை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. அதேபோல் செதல்வாட் நடத்தி வரும் என்.ஜி.ஓக்களின் கட்டமைப்புகள் குறித்தும் அந்நோட்டீஸில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
டீஸ்டா செதல்வாட்டின் என்.ஜி.ஓக்கள் குறித்து ஆய்வு நடத்துமாறு குஜராத் மாநில அரசு கேட்டுக் கொண்டதனடிப்படையில் உள்துறை அமைச்சகம் இந்நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. மேலும் செதல்வாட்டின் என்.ஜி.ஓக்கள் அலுவலகங்களிலும் சோதனை நடத்தவும் உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.