சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட்டின் முன் ஜாமீன் டிச.8 வரை நீட்டிப்பு
டெல்லி: குஜராத் சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட்டுக்கு வழங்கிய முன் ஜாமீனை டிசம்பர் 8-ந் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான டீஸ்டா செதல்வாட், 2002 ஆம் ஆண்டு கோத்ரா படுகொலை சம்பவங்களை வெளிஉலகுக்கு கொண்டுவந்தவர்களில் முக்கியமானவர். இவர் பல்வேறு என்.ஜி.ஓ. அமைப்புகளை நடத்தி வருகிறார். இந்த என்.ஜி.ஓ. அமைப்புகள் மூலம் வெளிநாட்டில் இருந்து நிதி உதவி பெற்று இந்தியாவுக்கு எதிரான பிரசாரங்களுக்கு உதவுகிறார் என்பது குஜராத் அரசின் குற்றச்சாட்டு.
இது தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும் வெளிநாடுகளில் இருந்து டீஸ்டாவின் என்.ஜி.ஓக்கள் நேரடியாக நிதி உதவி பெறவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இதனிடையே 2002ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நினைவகம் கட்டுவதாக கூறி வசூலிக்கப்பட்ட நிதியில் ரூ1.51 கோடி டீஸ்டா மோசடி செய்தார் என்ற வழக்கும் குஜராத் போலீசாரால் போடப்பட்டது. இந்த வழக்கில் தமக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி டீஸ்டா உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தார்.
அவருக்கு ஏற்கெனவே உச்சநீதிமன்றம் முன்ஜாமீன் அளித்திருந்தது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது டீஸ்டாவின் முன்ஜாமீனை டிசம்பர் 8-ந் தேதிவரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால் டிசம்பர் 8-ந் தேதிவரை டீஸ்டா செதல்வாட்டை போலீசார் கைது செய்ய முடியாது.