கேல் ரத்னா விருது பெற்ற சானியா மிர்சாவுக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வாழ்த்து
ஐதராபாத் : கேல் ரத்னா விருது பெற்ற சானியா மிர்சாவுக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு இன்று டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழாவில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.
இதற்கு தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது வாழ்த்துச் செய்தியில், தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் சானியா மேலும் பல விருதுகளை பெற வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.
லியாண்டஸ் பெயசுக்கு அடுத்தபடியாக நாட்டின் உயரிய விருதான கேல் ரத்னா விருதை பெறும் 2-வது டென்னிஸ் வீராங்கனை சானியா என்பது குறிப்பிடத்தக்கது.
சானியா தவிர, தெலுங்கானா மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த், ஸ்கேட்டிங் வீரர் அனூப்குமார், டென்னிஸ் வீரர் எஸ்.பி.மிஸ்ரா, அரசு சாரா அமைப்பு விளையாட்டு வீரர் சாய்பாபா ஆகியோரும் விருது பெற்றுள்ளனர்.