பசுவதை தடுப்பு கும்பலை மத்திய, மாநில அரசுகள் பாதுகாக்க கூடாது- உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
பசுவதை தடுப்பு கும்பலை மத்திய, மாநில அரசுகள் பாதுகாக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: பசுவதை தடுப்பு என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடும் கும்பல்களை மத்திய, மாநில அரசுகள் பாதுகாக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் பசுவதையை தடுக்கிறோம் என கூறிக் கொண்டு மாட்டிறைச்சி வைத்திருப்போரையும் விவசாய பணிகளுக்கு மாடுகளைக் கொண்டு செல்வோரையும் பசுவதை தடுப்பு கும்பல் அடித்தே கொல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தமிழகத்திலும் இத்தகைய சம்பவங்களை அரங்கேற்ற முயற்சிக்கின்றனர்.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், பசுவதை தடுப்பு என்ற பெயரிலான கும்பல்கள் சிறுபான்மையினர் மற்றும் தலித்துகளுக்கு எதிராக பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிடுகின்றனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், பசுவதை தடுப்பு கும்பல்களைக் எப்படி ஒடுக்குவது என்பது குறித்து 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் மாநில அரசுகளும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இத்தகைய கும்பல்களை மத்திய, மாநில அரசுகள் பாதுகாக்கக் கூடாது. இன்றைய விசாரணையின் போது, பசுவதை தடுப்பு கும்பல்களை பாதுகாக்கவில்லை என மத்திய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் விளக்கம் தரப்பட்டது.