பழிவாங்கும் ஆயுதமாக அவதூறு பிரிவுகளை பயன்படுத்துவதா? தமிழக அரசுக்கு சுப்ரீம்கோர்ட் குட்டு
டெல்லி: தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொடர்ந்த வழக்கில், அவதூறு வழக்கு சட்டத்தின் பிரிவுகளை பழிவாங்கும் ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளது.
தம் மீதான அவதூறு வழக்குகளுக்கு தடை கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் அவதூறு வழக்குகளுக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது.
இத்தடையை மீறி மற்றொரு அவதூறு வழக்கில் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோருக்கு எதிராக திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது. இந்த பிடிவாரண்ட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விஜயகாந்த் தரப்பு முறையீடு செய்தது.
பிடிவாரண்ட்டுக்கு தடை
இதனை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், விஜயகாந்த், பிரேமலதாவுக்கு ஆகியோருக்கு எதிரான பிடிவாரண்ட்டுக்கு இடைக்கால தடை விதித்தது. அத்துடன் அவதூறு வழக்குகள் விவகாரத்தில் தமிழக அரசை கடுமையாகவும் உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் சாடியது.
பழிவாங்கும் ஆயுதமா?
மேலும் குடிமக்களை காக்க வேண்டியது நீதிமன்றங்களின் கடமை. ஒரு அரசை விமர்சிப்பது என்பது அவதூறாகிவிடுமா? அவதூறு வழக்கின் பிரிவுகளை பழிவாங்கும் ஆயுதமாக பயன்படுத்துவதா? எனவும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு வைத்திருக்கிறது.
உடனே அவதூறா?
ஒரு அரசாங்கம் தகுதியற்றது அல்லது ஊழலில் ஈடுபட்டுள்ளது என ஒருவர் கூறினால் உடனே அது அவதூறு வழக்கு போடுவதற்கான அம்சமாகிவிடாது எனவும் நீதிபதிகள் தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர்.
எத்தனை அவதூறு வழக்குகள்?
அத்துடன் தமிழக அரசு இதுவரை தொடர்ந்த அவதூறு வழக்குகள் எத்தனை? அத்தனை அவதூறு வழக்குகளின் விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் 2 வார காலத்துக்குள் தமிழக அரசு பதில் மனுவைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு செப்டம்பர் 21-ந் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
போஸ்ட்மேனா?
இந்த வழக்கில் ஏற்கனவே தமிழக அரசை உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியிருந்தது. அவதூறு வழக்குகளைப் போடுவதற்காகவே அரசு வழக்கறிஞர்கள் என்ன போஸ்ட் ஆபீஸ்களா? எனவும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.