போதைப் பழக்கம் உள்ளதா.. 'பிக்பாஸ் நடிகையிடம்' விசாரணைக் குழு சரமாரிக் கேள்வி
போதைப் பொருள் சிக்கிய விவகாரத்தில் தெலுங்கு பிக்பாஸ் நடிகை முமைத்கான் விசாரணைக் குழு முன் ஆஜரானார். அவரிடம் போதைப் பொருள் தொடர்பான பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.
ஹைதராபாத்: போதைப் பொருள் விவகாரத்தில் சிக்கிய தெலுங்கு பிக்பாஸ் நடிகை முமைத்கான் ஹைதராபாத்தில் உள்ள கலால்துறை புலனாய்வு விசாரணைக் குழு முன் ஆஜரானார். அவரிடம் போதைப் பொருள் தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.
ஹைதராபாத்தில் போதைப்பொருள் சிக்கிய விவகாரத்தில் கடந்த 19ம் தேதி முதல் தெலுங்கு சினிமா துறையைச் சேர்ந்த இயக்குநர் பூரி ஜெகன்நாத், நடிகர்கள் தருண் உள்ளிட்ட திரைத்துறையினரிடம் கலால்துறை புலனாய்வு விசாரணைக் குழு விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகை முமைத்கான் போதைப் பொருள் விவகாரத்தில் நேரில் ஆஜராகி பதில் அளிக்க வேண்டும் என சம்மன் அளிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து முமைத்கான் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர், அவர் பூனேவிலிருந்து விமானம் மூலம் ஹைதராபாத்திற்கு வந்தார். அங்கு, நாம்பல்லியில் உள்ள விசாரணைக் குழு முன் முமைத்கான் ஆஜரானார்.
அவரிடம் போதைப் பொருள் தொடர்பான பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் உள்ளதா? அப்படி பழக்கம் இருக்கிறது என்றால் திரைத்துறையைச் சேர்ந்த யார் யாருக்கு போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது? என்றெல்லாம் சரமாரிக் கேள்வி கேட்கப்பட்டது.
முமைத்கான் தெலுங்கு திரைப்படம் மட்டுமின்றி தமிழ், கன்னடம், ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.