டெர்ரி நிறுவனத்தின் துணைத் தலைவராக ஆர்.கே.பச்சோரி நியமனம் !
டெல்லி: 'தி எனர்ஜி ரிசோர்சஸ் இன்ஸ்டிட்யூட்' (டெர்ரி) அமைப்பின் துணைத் தலைவராக சுற்றுச்சூழல் விஞ்ஞானி ஆர்.கே.பச்சோரி நியமிக்கப்பட்டுள்ளார்.
டெல்லியில் இயங்கி வரும் டெர்ரி எனப்படும் எரிசக்தி வளங்கள் நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் சுற்றுச்சூழல் விஞ்ஞானி ஆர்.கே.பச்சோரி. இவர் மீது சக பெண் ஊழியர் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன் பாலியல் புகார் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஆர்.கே.பச்சோரி அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் பச்சோரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கில் அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து எரிசக்தி செயல்திறன் செயலகத்தின் தலைமை இயக்குநர் பதவியில் இருந்த அஜய் மாத்தூர், புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் டெர்ரி ஆட்சிக் குழு கூட்டத்தில் டெர்ரியின் துணைத் தலைவராக ஆர்.கே.பச்சோரியை நியமிப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த பதவி சமீபத்தில் தான் புதிதாக உருவாக்கப்பட்டது. அதற்கு நியமிக்கப்படும் முதல் நபர் பச்சோரி என்பது குறிப்பிடத்தக்கது.