காஷ்மீர் எல்லையில் காத்து நிற்கும் ”பயங்கரம்” – உளவுத்துறை “திடுக்” தகவல்
டெல்லி: காஷ்மீரில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத்துறையான ஐ.பி எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தானின் உளவுத்துறை அமைப்பு உதவியுடன் ராணுவ முகாம்கள் உள்ளிட்ட இடங்களிலும் அரசியல் தலைவர்கள் மீதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது.
இந்தியாவிற்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த சர்வதேச எல்லையில் சுமார் 3 கிலோ மீட்டர் வரையில் தீவிரவாதிகள் நிலைக்கொண்டு உள்ளனர் என்று உளவுத்துறை தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தியாவிற்கு தாக்குதலை உறுதிசெய்யும் வகையில் எல்லையில் மிகவும் அருகில் பாகிஸ்தான் பகுதியில் அந்நாட்டு ராணுவம் உதவியுடன் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்க தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சமீபத்தில் ஜம்முவில் தீவிரவாதிகளால் இரண்டு பெரும் தாக்குதல் திட்டமிட்ட நடத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. காஷ்மீர் மாநிலம் அமைதியாக இருந்து விடக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு பாகிஸ்தான் ராணுவமும், தீவிரவாதிகளும் ஒருவர் மாற்றி ஒருவர் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் இரட்டை தாக்குதல் நடத்தினர். கதுவாவில் காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்திய 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மத்திய ஆயுதப்படை போலீசார் 2 பேரும் ஒரு போலீஸ்காரரும் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் நடந்து முடிந்து 24 மணி நேரம் ஆவதற்குள் காஷ்மீரில் ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை நடத்திய 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கி சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இதைதொடர்ந்து தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது.
இதனைத்தொடர்ந்து எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. உளவுத்துறைக்கு கிடைந்த தகவல்கள் அனைத்தும் ஜம்மு எல்லையில் தீவிரவாதிகள் முகாம் அமைத்து உள்ளதையே காட்டுகிறது என தகவல்கள் தெரிவித்து உள்ளது. மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தே, லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளை இயக்கி வருகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ராணுவம் அளித்த அறிக்கையிலும் தீவிரவாதிகள் ஜம்மு எல்லையில் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து நுழைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.