14 வருடங்களாக தொடர்கிறது குண்டு வெடிப்பு: தென் இந்தியாவின் 'ஈசி டார்கெட்' பெங்களூரா?
பெங்களூரு: நடிகர் வடிவேலு ஒரு திரைப்படத்தில், என்னை யாரெல்லாம் அடிச்சி பெரியாளாகி இருக்காங்க தெரியுமா..? என்று கேட்டுவிட்டு ரவுடிகள் பெயர்கள் அடங்கிய நீண்ட பட்டியல் ஒன்றையே வாசிப்பார். அதேபோல, பெங்களூரு நகரிலும் உள்நாட்டு அல்-உம்மா தீவிரவாதிகள் முதல் பன்னாட்டு லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் வரை தாக்குதல்களை நடத்தியுள்ளனர். தங்களது பராக்கிரமத்தை காண்பிக்க பெங்களூருவும் அதன் காவல்துறையும் தீவிரவாதிகளுக்கு மிகவும் எளிய டார்கெட்டாக மாறியுள்ளதை இச்சம்பவங்கள் நன்கு விளக்குகின்றன.
முதன்முதலாக கர்நாடகாவும், பெங்களூருவும் தீவிரவாத தாக்குதலை கண்டது 2000மாவது ஆண்டுதான். தீன்தர் அன்ஜுமான் என்ற தீவிரவாத அமைப்புதான் இந்த தாக்குதலுக்கு காரணம். குல்பர்கா நகரிலுள்ள செயின்ட் ஆன்ஸ் தேவாலயத்தில் 2000மாவது ஆண்டு ஜூன் 8ம்தேதி இந்த முதல் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. அதற்கு அடுத்த நாளே, பெங்களூரு, ஜேஜே நகரிலுள்ள செயின்ட் பீட்டர் பவுல் தேவாலயத்தில் வெடிகுண்டு வெடித்தது.
குண்டு வெடித்து தீவிரவாதிகள் சாவு
தீன்தர் அன்ஜுமான் தீவிரவாதிகள் ஜாகீர் மற்றும் சித்திக் ஆகியோர் மேலும் ஒரு சர்ச்சில் குண்டு வைக்கும் நோக்கத்தில் வாகனத்தில் வந்தபோது, பெங்களூரு மாகடி ரோடு என்ற பகுதியில் அந்த குண்டுகள் வெடித்து சிதறின. இதில் இரு தீவிரவாதிகளுமே உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, 29 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் 22 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் 7 பேருக்கு சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. ஆனால் ஹைகோர்ட் அவர்களின் தண்டனையை குறைத்து ஆயுளாக்கியது. ஏனெனில் சர்ச் தாக்குதலில் யாரும் சாகவில்லை, உயிரை கொல்லும் நோக்கமும் அவர்களுக்கு இல்லை என்று ஹைகோர்ட் கூறியது.
லஷ்கர்-இ-தொய்பா
2005ம் ஆண்டு டிசம்பர் 28ம்தேதி பெங்களூர் மல்லேஸ்வரத்திலுள்ள இந்திய அறிவியல் இன்ட்டிடியூட்டில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி கண்மூடித்தனமாக ஏகே-47 ரக துப்பாக்கியால் சுட்டதில் விஞ்ஞானி பூரி என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். தென்இந்தியாவில் லஷ்கர் நடத்திய முதல் தீவிரவாத தாக்குதல் அதுவாகும். இதில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது.
9 இடங்களில் அடுத்தடுத்து..
மும்பையில் நடைபெற்றதை போல 2008ம் ஆண்டு ஜூலை மாதம், பெங்களூருவின் 9 பகுதிகளில் தொடர் குண்டுவெடிப்புகள் நடந்தன. மடிவாளா பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த ஒரு பெண் உயிரிழந்தார். 22 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கு விசாரணையில், கேரளாவை சேர்ந்த அல்-உம்மா தலைவர், அப்துல் நாசர் மதானிக்கு தொடர்புள்ளது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணை நடைபெற்றுவருகிறது.
கிரிக்கெட் ஸ்டேடியத்தையும் விடவில்லை
2010ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது மைதான நுழைவாயிலின் அருகே குண்டுகள் வெடித்தன. சக்தி வாய்ந்த மற்றொரு குண்டு வெடிக்கும் முன்பே கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டது. இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பினர் இந்த தாக்குதலை நடத்தியிருந்தனர். கர்நாடகாவை சேர்ந்த யாசின் பத்கல் என்ற தீவிரவாதி இதற்கு மூளையாக செயல்பட்டான்.
பாஜக அலுவலகம் அருகே
2013ம் ஆண்டு ஏப்ரல் 17ம்தேதி, கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற சில நாட்களே இருந்த நிலையில், பெங்களூரிலுள்ள பாஜக தலைமை அலுவலகத்தின் அருகே குண்டுகள் வெடித்து சிதறின. 16 பேர் இத்தாக்குதலில் படுகாயமடைந்தனர். அதில் இரு கல்லூரி மாணவிகளுக்கு காலில் படுகாயமேற்பட்டு பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. இந்த தாக்குதலுக்கு காரணம் அல்-உம்மா என்று தெரியவந்தது.
அடுத்தடுத்த வருடத்தில் அட்டாக்
இந்நிலையில் ஓராண்டு கழித்து, இப்போது, பெங்களூரு எம்ஜிரோடு, சர்ச் தெரு பகுதியில் குண்டு வெடித்து ஒரு அப்பாவி பெண்ணின் உயிர் பறிபோகியுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்டது எந்த தீவிரவாத அமைப்பு என்பது கண்டுபிடிக்கப்பட வேண்டியுள்ளது.