பயங்கரவாதிகளின் சொர்க்கமாக உருமாறும் ட்விட்டர்.... 'செக்' வைக்க கிடுக்குப்பிடி நடவடிக்கைகள்!
தகவல் தொடர்பு பரிமாற்றத்தில் ட்விட்டர் சமூக வலைதளம் உண்மையில் சிறப்பாக சேவையாற்றி வருகிறது. அதே நேரத்தில் தங்களைத் தாங்களே ஆய்வாளர்களாக கருதிக் கொள்பவர்கள், வெறுப்பு அரசியலை முன்னெடுப்போர் மற்றும் பயங்கரவாதிகளின் சொர்க்கமாகவும் ட்விட்டர் தளம் உருவெடுத்திருக்கிறது.
தம்முடைய ட்விட்டர் தளத்தை தளமாகக் கொண்டு பயங்கரவாதிகள் செயல்பட்டு வருவதால் கடுமையான அழுத்தங்களுக்கு அந்நிறுவனம் முகம் கொடுக்க வேண்டியுள்ளது. இதனால் இத்தகைய அவதூறுகள், பயங்கரவாத தகவல்களை பரிமாறுவோரைக் கண்காணித்து கட்டுப்படுத்துவதற்கு ட்விட்டர் வலைதளமான புதிய மாற்றங்களை கொண்டு வர இருக்கிறது.
ட்விட்டரில் சுமார் 46 ஆயிரம் கணக்குகள் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது. இதேபோல் 24 ஆயிரம் கணக்குகள் அல்கொய்தா ஆதரவாளர்களர்களுடையதாக இருக்கிறது. இப்படி பயங்கரவாதிகளின் பதுங்குமிடமாக தகவல் பரிமாற்ற தளமாக ட்விட்டர் விஸ்வரூபமெடுப்பதாலே உலகம் முழுவதும் உள்ள புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன.
பயங்கரவாதிகள் கணக்கு வைத்திருப்பதற்கு தாங்கள் என்ன செய்ய முடியும்? என்று ட்விட்டர் நிர்வாகம் கை விரித்துவிட முடியாது. இந்த விவகாரத்தில் ட்விட்டர் நிர்வாகம் தீவிரமாக செயல்பட வேண்டிய கடமையும் இருக்கிறது. தமது தளத்தில் உருவாக்கப்படும் கணக்குகளை ஆராய்ந்து அதன் உள்ளடக்க விவரங்களை புலனாய்வுத் துறையுடன் பகிர்ந்த கொள்ள வேண்டும் என்கின்றனர் பாதுகாப்புத் துறை அதிகாரிகள்.
இதனால்தான் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வெறுப்பு அரசியலை பரப்புவோர், பயங்கரவாதிகள் ஆகியோரின் கணக்குகள் மற்றும் பகிர்ந்து கொள்ளும் தகவல்களை உளவுத்துறைக்கு உடனுக்குடன் தெரிவிக்கும் வகையிலான மாற்றங்களை ட்விட்டர் கொண்டுவர இருக்கிறது.
ட்விட்டரில் கணக்கு தொடங்கும் நபர் கொடுக்கின்ற இ மெயில்கள், தொலைபேசி எண்கள் ஆகியவையும் இனி தீவிரமாக பரிசீலிக்கப்பட இருக்கிறது. இதன் மூலமாக தேசவிரோத சக்திகளை ட்விட்டர் உதவியுடன் எளிதாக அடையாளம் காண முடியும் என்றும் நம்பப்படுகிறது.