மீண்டும் பலாத்கார மிரட்டல்... கயவர்களிடமிருந்து காப்பாற்ற மகளுக்கு மொட்டையடித்த அபலைத் தாய்!
தானே: தொடர் பாலியல் வன்கொடுமைகளில் இருந்து காப்பாற்ற, பெற்ற மகளுக்கு தாயே மொட்டையடித்த சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள கல்வா சேரிப்பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் இரு நபர்களால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானார். அச்சிறுமி திறந்த வெளியில் இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்ற போது இந்த பலாத்காரம் நடந்தது. அதனைத் தொடர்ந்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
தற்போது, குற்றம் சாட்டப்பட்ட இருவரும் ஜாமீனில் வெளி வந்துள்ளனர். சிறுமியின் தாயாரைச் சந்தித்த அவர்கள், தங்கள் மீதான புகாரை வாபஸ் பெறும் படி அவரை மிரட்டியுள்ளனர். புகாரை வாபஸ் வாங்காவிட்டால், அச்சிறுமியை மீண்டும் பலாத்காரம் செய்வோம் எனவும் அவர்கள் மிரட்டியுள்ளனர்.
இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த அபலைத் தாய், தனது மகளின் தலையை மொட்டை அடித்துள்ளார். ஏனெனில், தன் மகள் அழகாக இருந்ததாலேயே முன்னர் அவர் பலாத்காரத்திற்கு ஆளானதாகவும், தற்போது முடியை இழந்து அலங்கோலமாக இருப்பதால் அவரை யாரும் பாலியல் ரீதியாக துன்புறுத்த மாட்டார்கள் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
பாலியல் கொடுமைகளில் இருந்து தப்பிக்க, பெற்ற தாயே மகளுக்கு மொட்டையடித்து அலங்கோலப் படுத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.