குவைத் தூக்கு மேடையில் கணவரின் உயிர்... கொல்லப்பட்டவரின் குடும்பத்தினரிடம் மன்றாடும் நவீன 'சாவித்ரி'
குவைத் சிறையில் 10 நாட்களில் தூக்கு தண்டனையை எதிர்கொண்டுள்ள கணவரை மீட்பதற்காக தமிழகத்தை சேர்ந்த பெண் கேரளாவின் மலப்புரத்தில் கொல்லப்பட்டவரின் குடும்பத்தினரை நாடி உதவி கேட்டுள்ளார்.
திருவனந்தபுரம் : கொலைக்குற்றத்திற்காக குவைத் சிறையில் தூக்கு தண்டனையை நெருங்கும் கணவனை மீட்க தஞ்சாவூர் பெண் மாலதி கொல்லப்பட்டவரின் குடும்பத்தினரைத் தேடி கேரளாவின் மலப்புரத்தில் தஞ்சமடைந்துள்ளார்.
கடந்த 2013ம் ஆண்டு குவைத்தில் பணியாற்றிய போது தஞ்சாவூரைச் சேர்ந்த அர்ஜூன் என்பவருக்கும் கேரளாவின் மலப்புரத்தை சேர்ந்த தாமஸ்(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்பவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சண்டையில் தாமஸ் எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளார். இதனால் அர்ஜூன் கொலைக்குற்ற வழக்கில் குவைத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 4 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அர்ஜூனுக்கு 10 நாட்களில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இதனால் கணவரை மீட்க அர்ஜூனின் மனைவி மாலதி மலப்புரம் சென்றுள்ளார். ஏனெனில் கொலைக்குற்றவாளியாக இருந்தாலும் கொல்லப்பட்டவரின் குடும்பத்தார் மன்னிப்பு அளித்தால் குற்றவாளி விடுவிக்கப்படலாம் என்று குவைத் ஷரியா சட்டம் சொல்கிறது.
இழப்பீடு கேட்கும் குடும்பத்தார்
அர்ஜூன் தான் தங்களது குடும்பத்தின் ஒரே நம்பிக்கை என்பதாலும் தங்களது 13 வயது மகளுக்காகவும் கணவரை மீட்க வேண்டும் என்று மாலதி போராடி வருகிறார். எனவே மலப்புரத்தில் உள்ள தாமஸ் குடும்பத்தாரை தேடி கண்டுபிடித்து அவர்களிடம் மன்னிப்பு கேட்கச் சென்றுள்ளார் மாலதி. ஆனால் தாமஸின் குடும்பத்தார் மன்னிப்பு வழங்க மாலதியிடம் ரூ.30 லட்சம் இழப்பீடு கேட்டுள்ளதாக தெரிகிறது.
இரு குடும்பத்தின் போராட்டம்
மாலதி தன்னுடைய வீட்டை விற்று ரூ.10 லட்சம் பணம் திரட்டியுள்ளார். ஆனால் எஞ்சிய பணத்தை திரட்ட முடியாததால் மக்களிடம் மாலதி உதவி கேட்டுள்ளார். அதே சமயம் தாமஸின் குடும்பத்தாரும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் தான். தாமஸின் வருமானத்தில் குடும்பம் நடத்தி வந்த நிலையில் அவரின் மரணம் குடும்பத்தாருக்கு பெரும் இழப்பாகிவிட்டது.
குடும்பச் சூழலால் உதவித் தொகை
தாமஸின் மனைவி தனது 13 வயது மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். தாமஸ் உயிருக்கு ரூ. 30 லட்சம் விலை பேசவில்லை என்றாலும் தங்களது குடும்பம் உள்ள சூழலில் இந்தத் தொகை தங்களுக்கு உதவியாக இருக்கும் என்று அவர்கள் கருதுகின்றனர்.
காத்திருக்கும் மாலதி
ஏழ்மை நிலையில் தவிக்கும் இரண்டு குடும்பத்தினரிடையே நடக்கும் இந்த பாசப் போராட்டத்திற்கு எப்படி முற்றுப்புள்ளி வைக்கப்பட உள்ளது என்பது தொடர்கதையாக நீண்டு வருகிறது. எனினும் கணவரை மீட்கும் நம்பிக்கையோடு மலப்புரத்தில் நவீன சாவித்திரியாக மாறி மன்றா வருகிறார் மாலதி. கணவரை மீட்பாரா என்பதை காலம்தான் பதில் சொல்லும்.