பஞ்சாப் நெடுஞ்சாலைகளில் இனி சரக்கு கிடைக்கும்... சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!
நெடுஞ்சாலைகளில் மதுவிற்பனை தொடர்பான சட்ட திருத்தம் பஞ்சாப் சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்டது..
பஞ்சாப் சட்டசபையில் நெடுஞ்சாலையில் உள்ள ஹோட்டல், உணவகங்கள் மற்றும் கிளப் ஆகியவற்றில் மதுபானம் வழங்குவதற்கான சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து பஞ்சாபில் நெடுஞ்சாலைகளில் உள்ள ஹோட்டல்கள், கிளப்புகளில் மதுவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் இருபுறமும் 500 மீட்டர் தூரத்துக்குள் அமைந்துள்ள மதுக்கடைகளை மார்ச் 31ஆம் தேதிக்குள் மூட வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
அத்துடன், நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்கு அடுத்து மதுக்கடைகள் உள்ளன என்ற விளம்பரம் எதையும் வைக்கக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் இந்த உத்தரவில் சில திருத்தங்கள் செய்யக்கோரி தமிழகம், கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மேலும் சில மாநில அரசுகள் மற்றும் மதுக்கடை உரிமையாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது மது கடைகளை மூட போதிய கால அவகாசம் தந்திருப்பதால் இனியும் அவகாசம் தர முடியாது என்றும் உடனடியாக மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றம் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட நிலையில் பஞ்சாப் சட்டசபையில் நெடுஞ்சாலைகளில் மது விற்பனை செய்யும் சட்ட திருத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது.