அரசின் செயல்பாடுகளை செல்போனில் மக்கள் தெரிந்துகொள்ள வசதி: பிரதமர் மோடி பேச்சு
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று நடைபெற்ற 765 கிலோவாட் மின்சார தட துவக்க விழா நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொண்டு திட்டத்தை துவக்கி வைத்தார்.
அப்போது பொதுமக்கள் மத்தியில் மோடி பேசியதாவது:
பாஜகவுக்கு ஆதரவு அளித்ததன் மூலமாக ஜார்கண்ட் மாநிலம் வளர்ச்சி பாதையை தேர்ந்தெடுத்துள்ளது. இதற்காக வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன். குஜராத் மாநிலத்தை முந்தி செல்ல தேவையான அனைத்து தகுதியும் ஜார்கண்ட் மாநிலத்துக்கு உள்ளது.
தற்போது ஜார்கண்ட் மாநிலம் இருக்கும் நிலைமையை எங்களால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இதை வளர்ச்சி பாதைக்கு கொண்டு வந்தே தீருவோம். அடல் பிகாரி வாஜ்பாய் உருவாக்கிய மாநிலத்தை பாஜக கைவிடாது.
இந்தியாவை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல வேண்டுமானால், நாட்டின் எந்த ஒரு பகுதியையும் கைவிட முடியாது. அனைத்து மாநில வளர்ச்சிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் கொடுக்கும். அதன்மூலமாகவே நாட்டை வளர்க்க முடியும்.
அரசு என்ன பணியாற்றுகிறது என்பதை செல்போனை வைத்துக் கொண்டு சாமானியர்களும் கண்டுபிடிக்க வசதி செய்து தரப்படும். அந்த நிலையைத்தான் டிஜிட்டல் இந்தியா என்று கூறிவருகிறோம்.