அரசியல்வாதிகளின் சிம்ம சொப்பனம் ரூபா.. 31வது முறை பணியிடமாற்றமானதுதான் பரிசு!
பெங்களூர்: சசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூர் சிறைச்சாலையில் நடைபெற்ற முறைகேடுகளை அம்பலப்படுத்திய பெண் போலீஸ் அதிகாரி ரூபா கடந்து வந்த பாதை மிகவும் கடினமானது.
இன்று அவர் சிறைத்துறையிலிருந்து போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரது சர்வீசில் இது 31வது டிரான்ஸ்பராகும். 2000மாவது ஆண்டு யூபிஎஸ்சி தேர்வில் 43வது ரேங்க் பெற்றவர்.
பயிற்சி காலத்தில் தனது பேட்ஜில் 5வது ரேங்க் எடுத்தவர் ரூபா. ஹைதராபாத் தேசிய போலீஸ் சர்வீஸ் பயிற்சி மையத்தில் இவர் பயிற்சி பெற்றார். துப்பாக்கி சுடுதலில் ரூபா கை தேர்ந்தவர். பல விருதுகளை வெந்றுள்ளார்.
பலதுறை கலைஞர்
குடியரசு தலைவரின் விருதையும் ரூபா பெற்றுள்ளார். இவ்வளவு கடினமான காவல்துறை பணியில் இருந்தாலும், ரூபா ஒரு பயிற்சி பெற்ற பரதநாட்டிய கலைஞரும் ஆவார். கிளாசிக்கல் ஹிந்துஸ்தான் இசையிலும் தேர்ந்தவர்.
ம.பி. விரைந்தார்
கலவர வழக்கில் கர்நாடக நீதி்மன்ற உத்தரவை நிறைவேற்றுவதற்காக மத்திய பிரதேச முதல்வராக இருந்த உமாபாரதியை கைது செய்ய கிளம்பி சென்றவர் இவர். விவிஐபிகள், அரசியல்வாதிகளுக்காக நியமிக்கப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கையிலான போலீசாரை தேவையற்ற செலவு என குறைத்து பத்திரிகைகளின் ஹெட்லைன் செய்தியாக இடம் பிடித்தவரும் இதே ரூபாதான்.
Recommended Video
வாகனங்கள் குறைப்பு
சிட்டி ஆயுதப்படை துணை கமிஷனராக இருந்தபோது, முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கான பாதுகாப்பு வாகனங்கள் எண்ணிக்கையை குறைந்தவர் ரூபா. சமீபத்தில் மைசூர்-குடகு தொகுதி எம்.பி பிரதாப் சிம்ஹாவுடன் இவருக்கு மோதல் ஏற்பட்டது. மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய டெபுடேசனுக்கு அனுப்பிய விவகாரத்தில் இம்மோதல் வெடித்தது.
பணியிடமாற்றம்
ஒருகட்டத்தில் அதிகார வர்க்கம் அரசியல்வாதிகளை விட்டு தூர இருக்க வேண்டும் என வெளிப்படையாக தெரிவித்தவர்தான் இந்த ரூபா. இதன்காரணமாகத்தான் இன்றோடு 31வது முறையாக பணியிடமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளார்.