லோக்சபாவில் பேச ஆரம்பித்தாலே மைக்கை ஆப் பண்ணிடுறாங்கம்மா.. மாணவிகளிடம் 'முறையிட்ட' ராகுல்
பெங்களூர்: காங்கிரஸ் கட்சியினர் பேசும்போது மைக்கை ஆப் செய்துவிடுகிறார்கள் என்று பெங்களூரில் நடந்த கல்லூரி மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது, காங்கிரஸ் கட்சியின் தேசிய துணை தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
பெங்களூர், மவுண்ட்கார்மெல் கல்லூரியில் மாணவிகளுடன் ராகுல் காந்தி இன்று கலந்துரையாடினார். அவர்கள் கேள்விகளுக்கு ராகுல் பதிலளித்தார்.
காங்கிரஸ் ஒரு ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக என்ன செய்தது? நாடாளுமன்றத்தை முடக்குவதை தவிர? என்ற கேள்விக்கு ராகுல் பதில் அளிக்கையில், "ஜனநாயகம் என்பது உரையாடுவது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் பணி என்பது ஆளும் கட்சியுடன் உரையாடுவது மட்டுமே. ஆனால் அந்த உரையாடலுக்கு தடை விதிக்கப்படுகிறது. எங்கள் கட்சி எம்.பிக்கள், அரசுக்கு எதிராக கருத்து சொல்ல ஆரம்பித்தால் மைக்கை ஆப் செய்து விடுகிறார்கள். இது நாடாளுமன்ற ஜனநாயகம் இல்லை" என்றார் ராகுல் காந்தி.
ஜிஎஸ்டி வரி சட்டத்தை 3 வருடம் முன்பு காங்கிரஸ்தானே அறிமுகம் செய்தது, இப்போது ஏன் எதிர்க்கிறீர்கள்? என ஒரு மாணவி கேட்ட கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி "ஜிஎஸ்டி சட்டத்தின் வரி விதிப்பு பலன் மக்களுக்கு சென்று சேர வேண்டும் என்பதை வலியுறுத்திதான் காங்கிரஸ் எதிர்க்கிறது. நாங்கள் மக்களுக்கு பலன் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறோம். சூட் பூட் சர்க்கார் (மோடி அரசு) அப்படி நினைக்கவில்லை" என்றார்.